20 பேரை மட்டும் வைத்து தொலைக்காட்சி படப்பிடிப்பை நடத்த இயலாது - நடிகை குஷ்பு


20 பேரை மட்டும் வைத்து தொலைக்காட்சி படப்பிடிப்பை நடத்த இயலாது - நடிகை குஷ்பு
x
தினத்தந்தி 26 May 2020 5:03 AM GMT (Updated: 26 May 2020 5:03 AM GMT)

20 பேரை மட்டும் வைத்து தொலைக்காட்சி படப்பிடிப்பை நடத்த இயலாது என நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

சென்னை,

தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகளை குறைவான ஆட்களை வைத்து நடத்த முடியாது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சின்னத்திரை படப்பிடிப்பை 20 பேரை வைத்து நடத்துங்கள் என்று அரசு அனுமதி வழங்கி உள்ளது. அனுமதி கொடுத்து ஆறு ஏழு நாட்கள் ஆகியும் படப்பிடிப்பை எங்களால் ஆரம்பிக்க முடியவில்லை. காரணம் 20 பேரை மட்டும் வைத்து படப்பிடிப்பை நடத்துவது சாத்தியம் இல்லை.

ஒரு தொலைக் காட்சி தொடரை பார்த்தீர்கள் என்றால் ஒரு குடும்பம் இருக்கும். அந்த குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒரே பிரேமில் 6 முதல் 8 நடிகர் நடிகைகள் இருப்பார்கள். அவர்களின் உதவியாளர்கள் இருப்பார்கள்.

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி திரைப்பட தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 35 பேராவது பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

பெப்சி சார்பில் 35 பேர் நடிகர்-நடிகைகள் 8 பேர் அவர்கள் உதவியாளர்கள் 4 பேராவது வருவார்கள் ஆக 12 பேர் எங்கள் பக்கம் இருந்து வருவார்கள். இதில் எப்படி 20 பேரை மட்டும் வைத்து படப்பிடிப்பை நடத்த முடியும்.

எனவே இதுகுறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளோம். ஓடிடி தளத்தால் சினிமாவுக்கும் தொலைக்காட்சி தொடர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது. ஓடிடியில் சென்சார் கிடையாது அதனால் அதை குடும்பத்தோடு பார்க்க முடியாது.


Next Story