புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்


புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
x
தினத்தந்தி 22 Nov 2020 12:08 AM GMT (Updated: 22 Nov 2020 12:08 AM GMT)

தமிழ் சினிமாவில், சில நடிகைகள் புத்திசாலித்தனமும், சரியான வழிகாட்டுதலும் இல்லாமல் ஏமாந்து, உழைத்து சம்பாதித்த சொத்துகளை இழந்து இருக்கிறார்கள். இந்த பட்டியலில், சாவித்ரியில் தொடங்கி நமீதா வரை நிறைய பேர் இடம் பெற்றுள்ளனர்.

‘நடிகையர் திலகம்’ என்று பாராட்டப்பட்ட சாவித்ரி தன் கடைசி காலத்தில், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வறுமையில் வாடினார். சுமார் ஒரு வருட காலம் படுக்கையில் நோயாளியாக இருந்து உயிரை விட்டார்.காஞ்சனா சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விமான பணிப்பெண்ணாக வேலை செய்தவர். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் எம்.ஜி.ஆர். ஜோடியாக வந்தார். ‘சிவந்த மண்’ படத்தில், சிவாஜிகணேசன் ஜோடியாக நடித்தார். ‘சாந்தி நிலையம்,’ ’பாமா விஜயம்,’ ‘அதே கண்கள்’ உள்பட பல படங்களில் நடித்து இருந்தார். இவர், சிலரால் ஏமாற்றப்பட்டு சொத்துகளை இழந்தார். வறுமை காரணமாக ஒரு கோவிலில் வேலை செய்தார். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சொத்துகளை மீட்டார். அந்த சொத்துகளை எல்லாம் திருப்பதி கோவிலுக்கு எழுதி கொடுத்து விட்டார்.

ஸ்ரீவித்யா சரியான வழிகாட்டுதல் இல்லாமல், இரவு பகலாக நடித்து உழைத்த பணத்தையும், சொத்துகளையும் இழந்தார். சில்க் சுமிதா சொந்த படம் எடுத்து, சொத்துகளை இழந்து தற்கொலை செய்து கொண்டார். ‘கோழி கூவுது’ விஜி தவறான ஆபரேசனால் பாதிக்கப்பட்டு, சம்பாத்தித்த பணத்தை எல்லாம் சிகிச்சைக்கும், மருந்து மாத்திரைகளுக்கும் செலவிட்டார். பின்னர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

இப்போது உள்ள நடிகைகளில் நம்பிக்கை துரோகத்தால் சில கோடி மதிப்புள்ள சொத்துகளை இழந்தவர், நமீதா. இவர், குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி படங்களிலும் இரவு பகலாக நடித்து நிறைய சம்பாதித்தார். அந்த பணத்தை ‘ரியல் எஸ்டேட்’டில் முதலீடு செய்தார். சரியான வழிகாட்டுதலும், புத்திசாலித்தனமும் இல்லாமல், பாதி சொத்துகளை இழந்து விட்டார். எஞ்சியிருக்கும் சொத்துகளை காப்பாற்றுவதற்காக திடீர் திருமணம் செய்து கொண்டார்.

இந்த பட்டியலில், பானுப்ரியாவும் இருக்கிறார். சம்பாதித்த பணத்தை சரியாக காப்பாற்றாததால், பல கோடி மதிப்புள்ள சொத்துகளை இழந்து விட்டார்.

Next Story