ஜெய்பீம் படக்குழுவினரைப் பாராட்டி பார்த்திபன் டுவிட்..!
நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் படக்குழுவை இயக்குனர் பார்த்திபன் தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.
சென்னை,
சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்களும், கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டினர். ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் என்னத்த சொல்லறது என தலைப்பிட்டு, ஜெய்பீம் படக்குழுவினரை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'சட்டத்தை நீதி, நிதி எதற்கும் பயன்படுத்தலாம். அப்படியே சினிமாவையும், நிறைய காசுக்கும் நல்ல காரணத்திற்கும் பயன்படுத்தலாம்.
ஒரு சினிமா மூலமாக ஏற்கனவே (இருளர்கள்) இருண்டிருக்கும் வாழ்வில் சிறு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி அதையும் ஒரு கமர்ஷியல் என்று வண்ணம் பூசிக் கொள்ளாமல் உலக அளவில் கமர்ஷியலாகவும் வென்றிருக்கும் திரைப்படத்தை, பார்க்கத் துவங்கி கரைந்தே போனேன்.
சந்துரு சார்! இது பெயரல்ல. நீதி என்ற பதத்தின் மொழிபெயர்ப்பு! அவரை நான் நல்லது செய்யும் மேடைகளில் நடுநாயகராக அமர்த்தி கௌரவம் தேடிக் கொண்டுள்ளேன். அவரின் வாழ்க்கையை படமாக்கவும் ஆசைப்பட்டுள்ளேன்.
அது இன்று த.செ.ஞானவேல் மூலம் நிறைவேறி இருக்கிறது. இன்று பிரபஞ்சம் சந்துருவை பாராட்ட, மெய் சிலிர்க்கிறேன். சினிமா மூலம் சமூகத்திற்கு கோடானு கோடி நன்மை செய்திருக்கும் சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களை மானசீகமாக வணங்குகிறேன்' இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 5, 2021
Related Tags :
Next Story