22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரிலீசாகிறது 'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படம்..!


22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரிலீசாகிறது துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம்..!
x
தினத்தந்தி 18 Dec 2021 12:31 PM GMT (Updated: 18 Dec 2021 12:31 PM GMT)

நடிகர் விஜய் மற்றும் நடிகை சிம்ரன் நடித்திருந்த 'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படம் 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரிலீசாகிறது

திருவனந்தபுரம்,

நடிகர் விஜய் மற்றும் நடிகை சிம்ரன் நடித்திருந்த 'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆகின்றன. இந்த திரைப்படம் 1999-ம் ஆண்டில் வெளியான போது தமிழக திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேலாக ஓடியது. மேலும், கேரள திரையரங்குகளில் 125 நாட்கள் ஓடியது.

இந்த நிலையில், கேரளாவிலுள்ள விஜய் ரசிகர்கள் 22 வருடங்களுக்குப் பிறகு 'துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். இதையொட்டி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கலாபவன் தியேட்டரில் டிசம்பர் 19 (நாளை) மாலை 7 மணிக்கு படத்தை மீண்டும் ரிலீஸ் செய்கின்றனர்.

இதுகுறித்து நடிகை சிம்ரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் அவர், 'அனைவரின் எவர்கிரீன் பேவரைட் (Evergreen Favourite) திரைப்படமான துள்ளாத மனமும் துள்ளும் 22 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் கேரள விஜய் ரசிகர்கள்  டிசம்பர் 19-ல் ரிலீஸ் செய்யப்படுகிறது' என்று கூறியுள்ளார்.


இயக்குனர் எழிலுக்கு அறிமுக திரைப்படமான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் வணிக ரீதியாக மிகப்பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த திரைப்படம் 3 தமிழ்நாடு திரைப்பட விருதுகளை பெற்றது. தமிழில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 5 மொழிகளில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது.

Next Story