பெரிய நடிகர்கள் வருடத்திற்கு 2 படங்கள் மட்டுமே நடிக்க வேண்டும் - திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை


பெரிய நடிகர்கள் வருடத்திற்கு 2 படங்கள் மட்டுமே நடிக்க வேண்டும் - திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை
x

போல் உலக அழகிப் போட்டி, ஐ.பி.எல். உள்ளிட்ட அனைத்து பொழுது போக்கு அம்சங்களையும் திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க வேண்டும்

சென்னை

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டவர்கள் ஆண்டுக்கு இரண்டு படங்கள் நடிக்க வேண்டும், மேலும், படங்கள் திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பின்னர்தான் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல், டிக்கெட் கட்டணத்தில் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி கட்டணம் இருக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அதே போல் உலக அழகிப் போட்டி, ஐ.பி.எல். உள்ளிட்ட அனைத்து பொழுது போக்கு அம்சங்களையும் திரையிட அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் திரையரங்க உரிமையாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:-

தியேட்டரின் கட்டணத் தொகையை அதிகபட்சம் ரூபாய் 250 வரை நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதேபோல், குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 40 என்பது ஏற்கனவே உள்ளது. அதனை அப்படியே தொடரவும் எங்கள் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.

எல்லா திரையரங்கு மற்றும் திரைப்படத்திற்கு ரூபாய் 250 கட்டணம் வசூலிக்கும் நோக்கில் கோரிக்கை வைக்கப்படவில்லை. தியேட்டர் மற்றும் திரைப்படத்தைப் பொறுத்து நிர்ணயம் செய்யவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக வெளியான திரைப்படங்கள் நல்ல திரைப்படமாக இல்லாததால் மக்கள் திரையரங்கிற்கு வரவே இல்லை. அண்மையில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வசூலை கொடுத்தது. அதற்கு முன்னர் வெளியான போர் தொழில் திரைப்படத்திற்கும் குட்நைட் திரைப்படத்திற்கும் மக்கள் திரையரங்கிற்கு அதிகப்படியாக வந்தார்கள்.

புதிய கண்டெண்ட் கொடுத்தால் மக்கள் நிச்சயம் திரையரங்கிற்கு வருவார்கள். நல்ல கதை இருந்தால் புது கதாநாயகனை வைத்து படம் எடுத்தால், படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும். ஆனால் இயக்குநர்கள் அந்த முயற்சியை மேற்கொள்வதில்லை. இது இயக்குநர்களிடம் உள்ள தவறு இதனை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் அதிகபட்சம் ரூபாய் 50 தான் வசூலிக்கப்படுகிறது. ஒரு சில திரையரங்கில் அதைவிட குறைவாகவும் வசூலிக்கப்படுகிறது. மால்களில் திரையரங்க உரிமையாளர்களிடம் பார்க்கிங் உரிமை இல்லாததால், அங்கு கட்டணத்தை மால் உரிமையாளர்கள்தான் நிர்ணயம் செய்கிறார்கள்.

நல்ல நல்ல படங்கள் வந்தால் மக்கள் அதிகம் திரையரங்கிற்கு வருவார்கள், திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகும், இதனால் திரையுலகமும் நன்றாக இருக்கும் என கூறினார்.


Next Story