'சாதிய வர்க்கத்துக்கு எதிராக திமிருடன் சண்டை செய்தவர் விஜயகாந்த்' - இயக்குனர் பா.ரஞ்சித் புகழாரம்


சாதிய வர்க்கத்துக்கு எதிராக திமிருடன் சண்டை செய்தவர் விஜயகாந்த் - இயக்குனர் பா.ரஞ்சித் புகழாரம்
x

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு பிற்பகல் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 72 குண்டுகள் முழங்க முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஊரில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருந்தவன் நான். அவர் நடித்த திரைப்படங்களில் மக்களுக்கு ஆதரவாக நிற்கும் கதாபாத்திரங்களில்தான் அதிகம் நடித்துள்ளார்.

என்னுடைய இளம் வயது காலங்களை நினைத்துப் பார்த்தால், நான் விஜயகாந்த் ரசிகனாகத்தான் இருந்திருக்கிறேன். அவர் எனக்கு பிடித்த நடிகர். அவருடைய அரசியலும், திரையுலகில் அவரது ஆளுமையும் மிக முக்கியமான விஷயங்களாக இருந்தன. அவருடைய இறப்பு ஒரு மிகப்பெரிய வலியை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர். சாதிய வர்க்கத்துக்கு எதிராகவும், மிகப்பெரிய ஆளுமைகளுக்கு எதிராகவும் திமிருடன் சண்டை செய்தவர். அவருடைய இறப்பை சினிமாவுக்கும், அரசியலுக்கும் மிகப்பெரிய இழப்பாகப் பார்க்கிறேன்' என்று தெரிவித்தார்.


Next Story