மீண்டும் மலையாளத்தில் ஷோபனா


மீண்டும் மலையாளத்தில் ஷோபனா
x
தினத்தந்தி 25 Oct 2019 9:14 AM GMT (Updated: 25 Oct 2019 9:14 AM GMT)

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 1980, 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஷோபனா.

நாட்டியம் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, நாட்டிய பள்ளி ஒன்றை தொடங்கியவர், 1990-களின் பிற்பாதியில் கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். அவ்வப்போது நல்ல கதையம்சம் உள்ள கதைகளில் மட்டும் நடித்து வந்த அவர், கடந்த 6 வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். இவர் மலையாளத்தில் நடித்து 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘திர.’ இந்த நிலையில் மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படத்தை மலையாளத்தில் பிரபல இயக்குனராக இருந்து வரும் சத்யன் அந்திக்காடுவின் மகன் அனூப் சத்யன் இயக்குகிறார். துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சுரேஷ்கோபியின் ஜோடியாக ஷோபனா நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘ராஜபுத்ரன்’ திரைப்படம் 1996-ம் ஆண்டு வெளியானது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு சுரேஷ்கோபியும், ஷோபனாவும் இந்தப் படத்தின் மூலமாக இணைந்திருக்கிறார்கள். கதையைக் கேட்டவுடன் சுரேஷ் கோபி இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம். ஆனால் ஷோபனா அவ்வளவு எளிதாக இந்தக் கதையில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். திரும்பத் திரும்ப கதை கேட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து இயக்குனர் அனூப் சத்யனுக்கு ஓகே சொல்லியிருக்கிறார். அனூப் சத்யன், தன்னை யாருடைய மகன் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமலே, ஷோபனாவை இந்தப் படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story