எனக்கு வாய்த்த அடிமைகள்


எனக்கு வாய்த்த அடிமைகள்
x
தினத்தந்தி 4 Feb 2017 6:34 AM GMT (Updated: 4 Feb 2017 6:34 AM GMT)

சாப்ட்வேர் கம்பெனியில் வேலைபார்க்கும் ஜெய்க்கு, ஷேர் ஆட்டோ ஓட்டும் காளி வெங்கட், பாங்கி கேசியர் கருணாகரன், கால் சென்டரில் பணியாற்றும் நவீன் ஆகிய மூன்று நண்பர்கள்.

கதையின் கரு: காதலில் தோல்வியுற்ற ஒரு இளைஞனால் மூன்று நண்பர்கள் படும் அவஸ்தைகள்.

தினமும் குடி, கும்மாளம் என்று இருக்கிறார்கள். ஜெய்க்கும் அவரது நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிரணிதாவுக்கும் காதல் மலர்கிறது. இருவரும் ‘பிக்னிக்’ போன இடத்தில் படுக்கையிலும் இணைகிறார்கள்.

அதன்பிறகு ஜெய்யை, பிரணிதா உதறிவிட்டு கம்பெனி மேலதிகாரியுடன் நெருக்கமாகி அவரை திருமணம் செய்யவும் தயாராகிறார். ஜெய் காதல் தோல்வியில் நொறுங்குகிறார். வி‌ஷம் தின்று சாவதற்காக ஓட்டலில் அறை எடுத்து தங்குகிறார். தற்கொலை முடிவை நண்பர்களுக்கு தெரிவித்து விட்டு போனை துண்டிக்கிறார். நண்பர்கள் ஜெய்யை தேடி அலைகிறார்கள். அப்போது எதிர்பாராத அசம்பாவிதங்களில் சிக்குகின்றனர்.

 நவீன் மீது ஒருவன் காரை ஏற்ற குற்றுயிராய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார். காளிவெங்கட் ரவுடியிடம் சிக்கி செய்யாத கொலைக்காக சிறைக்கு செல்கிறார். கருணாகரனை விலைமாதுவுடன் போலீஸ் பிடிக்க–அவரது திருமணம் நின்று போகிறது. ஜெய் என்ன ஆனார்? பிரச்சினைகளில் இருந்து நண்பர்கள் தப்பினார்களா? என்பது மீதி கதை.

ஜெய்க்கு முக்கிய படம். கதாபாத்திரத்தை உள்வாங்கி காட்சிகளோடு ஈர்த்து விடுகிறார். சிறுசிறு உதவிகளால் காதலை உயிர்ப்பிப்பது, காதலியை இன்னொருவனுடன் பார்த்து உடைவது, காதலி வீட்டில் போதையில் தகராறு செய்வது, வி‌ஷம் குடித்து சாவதா, வேண்டாமா என்ற மனப்போராட்டத்தில் தவிப்பது என அழுத்தமாக பதிகிறார்.

நண்பர்களை சிக்கலில் இருந்து மீட்க போராடும் காட்சிகளில் சுவாரஸ்யம் கூட்டுகிறார். கொலைகாரர் நான் கடவுள் ராஜேந்திரனுக்கும் ஜெய்க்கும் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் ரகளை. அழகான காதலியாக வருகிறார் பிரணிதா. காதலனுக்கு துரோகம் செய்து கழிவறையில் இன்னொருவருடன் சல்லாபிப்பது அபத்தம்.

நண்பனை செத்துப் போ என்று ஆத்திரத்தில் திட்டும் கருணாகரன், அவன் இறந்தால் போலீஸ் உன்னைத்தான் கைது செய்யும் என்று அவரை பயமுறுத்தும் காளிவெங்கட், மனோதத்துவ நிபுணராக வரும் தம்பிராமையா, நவீன் ஆகியோர் நகைச்சுவைக்கு உத்தரவாதம் தருகிறார்கள்.

சந்தானம், அஞ்சலி ஆகிய இருவரும் ஒரு காட்சியில் தலைகாட்டினாலும் நிறைவு. வசனங்களில் அங்கங்கே ஆபாச நெடி. முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக கொடுக்க முயற்சித்து அதில் வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி, சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். மகேஷ் முத்துசாமி கேமரா காட்சிகளை அழகுபடுத்தி இருக்கிறது.


Next Story