காளி


காளி
x
தினத்தந்தி 22 May 2018 4:35 PM GMT (Updated: 22 May 2018 4:35 PM GMT)

வெளிநாட்டில் இருந்து தாய்-தந்தையை தேடி தாயகம் வரும் இளைஞர். படம் "காளி" கதாநாயகன் விஜய் ஆண்டனி,கதாநாயகி அஞ்சலி, சுனைனா, ஷில்பா, அம்ரிதா டைரக்‌ஷன் கிருத்திகா உதயநிதி, படத்தின் சினிமா விமர்சனம்.

கதையின் கரு: விஜய் ஆண்டனி, அமெரிக்காவில் ஒரு ஆடம்பர ஆஸ்பத்திரியின் இருதய பிரிவு டாக்டர். இவருக்கு மாடு முட்டுவது போலவும், பாம்பு வருவது போலவும் அடிக்கடி கனவு வருகிறது. இந்த நிலையில், அவருடைய பெற்றோர்கள் வளர்ப்பு தாய்-தந்தை என்றும், உண்மையான பெற்றோர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கிறார்கள் என்ற விவரமும் விஜய் ஆண்டனிக்கு தெரியவருகிறது. அதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் விஜய் ஆண்டனி, தன்னை பெற்ற தாய்-தந்தையை தேடி, தமிழ்நாட்டுக்கு வருகிறார். தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் தாய்-தந்தையை தேடி அலைகிறார். அப்போது அவருடைய தாயார் இறந்து போனதும், தந்தை மட்டும் எங்கேயோ உயிருடன் இருக்கிறார் என்பதும் தெரியவருகிறது.

கிராமத்து பண்ணையார் மதுசூதன்ராவ், முரட்டுத்தனம் மிகுந்த நாசர், சாந்தமே உருவாக கொண்ட பாதிரியார் ஜெயப்பிரகாஷ் ஆகிய மூன்று பேர்களில் ஒருவர் தனது தந்தையாக இருக்கலாம் என்று விஜய் ஆண்டனி சந்தேகப்படுகிறார். மதுசூதன்ராவ், நாசர் ஆகிய இருவரும் அவருடைய தந்தை அல்ல என்பது உறுதி செய்யப்படுகிறது. மீதமுள்ள ஒரே நபர், பாதிரியார் ஜெயப்பிரகாஷ் மட்டுமே. அவர்தான் விஜய் ஆண்டனியின் தந்தையா? அல்லது வேறு யாருமா? என்பதற்கு பதில், ‘கிளைமாக்ஸ்’சில் இருக்கிறது.

ஆடம்பர ஆஸ்பத்திரியின் ‘காஸ்ட்லி’யான டாக்டர் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார், விஜய் ஆண்டனி. அவர் தன் தாய்-தந்தையை தேடி, தமிழ்நாட்டுக்கு வந்து கிராமம்-கிராமமாக அலைவதன் மூலம் அனுதாபத்தை அள்ளுகிறார். அஞ்சலி, சுனைனா, ஷில்பா, அம்ரிதா ஆகிய நான்கு கதாநாயகிகளில், அஞ்சலி-சுனைனா ஆகிய இருவருடனுமான காதல், ரசிக்க வைக்கிறது. சண்டை காட்சிகளில் விஜய் ஆண்டனியின் வேகம், படத்துடன் ஒன்ற வைக்கிறது.

கிராமத்து நாட்டு வைத்தியராக அஞ்சலி வருகிறார். உடம்பில் மெருகேறி இருப்பது போல் நடிப்பிலும், பளிச். சுனைனா, கிராமத்து பூமயிலாக வசீகரிக்கிறார். ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகிய இருவரிடமும் முன்னணி கதாநாயகிகளாக வருவதற்கான அறிகுறி தெரிகிறது.

விஜய் ஆண்டனியுடன் அவருடைய பெற்றோர்களை தேடி அலைகிற கலகல ஆசாமியாக, யோகி பாபு. அவர் உருவமும், வசன காமெடியும் சிரிக்க வைக்கின்றன. ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி ஆகிய இருவரும் வில்லன்களாக மிரட்டுகிறார்கள். மதுசூதன்ராவ் வில்லன் போல் அறிமுகமாகி, தனது காதல் எப்படி தோல்வி அடைந்தது? என்று கண்கலங்குகிற காட்சியில், நெகிழவைக்கிறார். நாசரின் காதல் கதையில், கவித்துவம். ஜெயப்பிரகாஷ் கதாபாத்திரமும், நடிப்பும் அவரை ‘ஜென்டில்மேன்’ ஆக உயர்த்தி காட்டுகின்றன.

4 காதல் கதைகளுக்கும் நான்கு விதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ரிச்சர்ட் எம்.நாதன். விஜய் ஆண்டனி இசையில், பாடல்கள் எதுவும் நினைவில் நிற்கவில்லை. மென்மையான பின்னணி இசை, காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து தாயகம் வரும் கதாநாயகனின் கதை, புதுசு அல்ல. கதாநாயகன் விஜய் ஆண்டனி படம் முழுக்க வரவேண்டும் என்ற எண்ணத்தில், 4 ‘பிளாஷ்பேக்’ காட்சிகளிலும் அவரையே நடிக்க வைத்திருப்பது, குழப்பம். என்றாலும், விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் கதை சொல்லியிருப்பதன் மூலம் ஜனரஞ்சகமான டைரக்டராக மீண்டும் நிரூபித்து இருக்கிறார், கிருத்திகா உதயநிதி.


Next Story