சிலுக்குவார்பட்டி சிங்கம்


சிலுக்குவார்பட்டி சிங்கம்
x
தினத்தந்தி 21 Dec 2018 4:42 PM GMT (Updated: 21 Dec 2018 4:45 PM GMT)

ஒரு போலீஸ்காரரும், பயங்கர தாதாவும் படம் "சிலுக்குவார்பட்டி சிங்கம்" கதாநாயகன் விஷ்ணு விஷால், கதாநாயகி ரெஜினா கசன்ட்ரா, டைரக்‌ஷன் செல்லா அய்யாவு இயக்கியுள்ள படத்தின் விமர்சனம்.

கதையின் கரு:  விஷ்ணு விஷால், கருணாகரன் ஆகிய இருவரும் சிலுக்குவார்பட்டி போலீஸ் நிலையத்தின் பொறுப்பு இல்லாத போலீஸ்காரர்கள். இவர்கள் இருவரும் ஊரில் உள்ள கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுகிறார்கள். அந்த வேலையை கவனிக்காமல் இரண்டு பேரும் கவர்ச்சி ஆட்டக்காரி கனகா(ஓவியா) உடன் சேர்ந்து குத்தாட்டம் போடுகிறார்கள். கண்ணில் படுகிற எல்லா அழகான பெண்களிடமும் விஷ்ணு விஷால் வழிகிறார்.

தனது முறைப்பெண் என்று தெரியாமலே ரெஜினா கசன்ட்ரா மீதும் காதல்வசப்படுகிறார். விஷ்ணு விஷாலுக்கு ஒரு விசித்திர பழக்கம். ஒயின் ஷாப்பில் அவர் ஆம்லெட் சாப்பிடும்போது யாராவது தட்டி விட்டால், ஆக்ரோஷமாக அறைந்து விடுவார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில், ஊரே பார்த்து மிரள்கிற தாதா ரவிசங்கரை, விஷ்ணு விஷால் அறைவதுடன், அவரை கைது செய்து போலீஸ் நிலையத்தில் அடைத்து வைக்கிறார்.

12 தனிப்படை போலீஸ் தேடுகிற பயங்கர தாதா, ரவிசங்கர். அவரை யார் என்று தெரியாமல், போலீஸ் காவலில் வைத்து மீண்டும் மீண்டும் விஷ்ணு விஷால் சீண்டுகிறார். அந்த போலீஸ் நிலையத்தையே அடித்து நொறுக்கி விட்டு சக ரவுடிகளுடன் தப்பிக்கிறார், ரவிசங்கர். தன்னை கைது செய்து அவமானப்படுத்திய விஷ்ணு விஷாலை கொன்றே தீருவேன் என்ற சபதத்துடன் அவரை தேடுகிறார், ரவிசங்கர். அவரிடம் இருந்து தப்பிக்க விஷ்ணு விஷால் மாறுவேடங்களில் அலைகிறார். அவர் ரவிசங்கரிடம் சிக்கினாரா, இல்லையா? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

விஷ்ணு விஷாலுக்கு அந்த சிரிப்பு போலீஸ்காரர் வேடம், கச்சிதமாக பொருந்துகிறது. அவருடைய அறிமுக காட்சியே கலகலப்பு. அழகான பெண்களை கண்டால் அவர்கள் மீது காதல் பார்வையை வீசுகிற அவர், ரெஜினாவிடம் எசகுபிசகாக மாட்டிக்கொண்டு சமாளிக்கும் காட்சி, நல்ல தமாஷ். ரவிசங்கர் யார்? என்று தெரியாமல் அவரை அடித்து நொறுக்கும்போதும், அவர் 12 தனிப்படை போலீசாரால் தேடப்படும் தாதா என்று தெரிந்ததும் பயந்து விழிபிதுங்கி நிற்கும்போதும், விஷ்ணு விஷால் சிரிக்க வைக்கிறார்.

அவருடைய மாறுவேடங்கள், குறிப்பாக அந்த ஆட்டக்காரி வேடம், அமர்க்களம்.

ரெஜினா, அழகான கதாநாயகி. கலர் கலரான உடைகளில் கூடுதல் அழகு காட்டுகிறார். யோகி பாபு, வில்லன் ரவிசங்கரின் தம்பியாக வருகிறார். அவரை பார்த்ததுமே சிரிப்பு வருகிறது. அவரே அவருக்குள் பேசிக்கொள்ளும் வசன வரிகள், ஆரவாரமான நகைச்சுவை. கருணாகரனும் சிரிப்பு போலீசாக வருகிறார்.

வில்லன் ரவிசங்கர், இன்னொரு வில்லன் ஆனந்தராஜ், மற்றொரு வில்லன் மன்சூர் அலிகான், போலீஸ் அதிகாரி லிவிங்ஸ்டன், சக கைதியாக சிங்கமுத்து என எல்லா கதாபாத்திரங்களும் காமெடி செய்கின்றன.

லியோன் ஜேம்ஸ்சின் பின்னணி இசை, (நகைச்)சுவை கூட்டுகிறது. முழுக்க முழுக்க சிரிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் டைரக்டர் செல்லா அய்யாவு வெற்றி பெற்று இருக்கிறார். இடைவேளை வரை சிரிப்பு படம், மீதி சீரியஸ் படம் என்ற வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு, படம் முழுவதும் சிரிக்க வைத்திருப்பது, சிறப்பு.

வில்லன் ரவிசங்கர் தாடி-மீசையை எடுத்தால் அடையாளம் தெரியாது என்று காட்டியிருப்பது, நம்ப முடியாத தமாஷ்.

Next Story