தாதா 87


தாதா 87
x
தினத்தந்தி 3 March 2019 7:43 PM GMT (Updated: 3 March 2019 7:43 PM GMT)

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன் - சரோஜா நடிப்பில் உருவாகி இருக்கும் `தாதா 87' படத்தின் விமர்சனம்.

வட சென்னை பகுதியில் வசிக்கும் இளைஞர் ஆனந்த் பாண்டிக்கு பார்க்கும் பெண்கள் மீதெல்லாம் ஆசை. வயதான நல்ல தாதா சாருஹாசன் விருப்பம் இல்லாத பெண்களை தொட்டால் வெட்டுவேன் என்று வெறியோடு இருக்கிறார். சாதிக்கு எதிராகவும் குரல் கொடுக்கிறார். அதே பகுதியில் மணிமாறன் போதை பொருள் கடத்துகிறார். பாலாசிங் சட்டவிரோத செயல் செய்கிறார். இவர்களுக்கு எதிரியாக இருக்கிறார் எம்.எல்.ஏ மனோஜ்குமார்.

இந்த குடியிருப்பு பகுதிக்கு ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஜனகராஜ், மகள் ஸ்ரீபல்லவியுடன் குடி வருகிறார். ஆனந்த் பாண்டிக்கு ஸ்ரீபல்லவியை பார்த்ததும் காதல் வருகிறது. பின்னால் சுற்றி காதலை ஏற்கும்படி நிர்ப்பந்திக்கிறார். ஒரு கட்டத்தில் ஸ்ரீபல்லவியும் காதலை ஏற்கிறார். அப்போது தான் யார் என்ற ஒரு ரகசியதை ஸ்ரீபல்லவி சொல்ல ஆனந்த் பாண்டி அதிர்ச்சியாகி பின்வாங்குகிறார். காதல் ஜோடி சேர்ந்தார்களா? என்பது மீதி கதை.

கண்களை உருட்டி முகத்தில் அனல் கக்க வயதான தாதாவாக மிரட்டுகிறார் சாருஹாசன். பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்தவனை எரித்துக்கொல்வது, சாதி தலைவர்களுடன் மோதுவது என்று கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்துள்ளார். குரலிலும் கர்ஜனை. ஆனந்த் பாண்டி துறுதுறுவென வருகிறார். காதலியை பற்றிய உண்மை தெரிந்து படும் அவஸ்தைகள் சுவாரஸ்யம்.

ஸ்ரீபல்லவிக்கு அழுத்தமான வேடம். அதை சிறப்பாக செய்துள்ளார். தனது நிலைக்காக கதறும்போது அனுதாபமும் பெறுகிறார். ஜனகராஜ் அனுபவ நடிப்பால் கவர்கிறார், சாருஹாசன் காதலியாக சரோஜா சிறிது நேரம் வந்தாலும் ரசனை. மனோஜ்குமார், பாலாசிங் கதாபாத்திரங்களும் நிறைவு. ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் ஸ்ரீபல்லவியின் வாழ்க்கை ரகசிய முடிச்சு அவிழ்ந்ததும் கதையை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீ. இசையும் ஒளிப்பதிவும் கதையோடு ஒன்ற வைக்கின்றன.

Next Story