இருபத்தைந்து வயது தம்பதிகள் அறுபதை தாண்டிய தம்பதிகளாக மாறுகிறார்கள்: படம் "ஹவுஸ் ஓனர்" - விமர்சனம்


இருபத்தைந்து வயது தம்பதிகள் அறுபதை தாண்டிய தம்பதிகளாக மாறுகிறார்கள்: படம் ஹவுஸ் ஓனர் - விமர்சனம்
x
தினத்தந்தி 19 July 2019 4:49 PM GMT (Updated: 19 July 2019 4:49 PM GMT)

ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி வரிசையில், லட்சுமி ராமகிருஷ்ணன் டைரக்டு செய்திருக்கும் நான்காவது படம்.

2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி, சென்னையில் பெய்த பெருமழையும், பேரிடரும்தான் மொத்த கதையே. ‘பசங்க’ கிஷோர் ராணுவத்தில் பணிபுரிகிறார். இவருக்கும், லவ்லின் சந்திரசேகருக்கும் திருமணம் நடக்கிறது. இருவரும் நெருக்கமான தம்பதிகளாக ஒருவர் மீது ஒருவர் காதலாக இருக்கிறார்கள்.

வருடங்கள் கடந்து, இந்த இருபத்தைந்து வயது தம்பதிகள் அறுபதை தாண்டிய தம்பதிகளாக (‘ஆடுகளம்’ கிஷோர்-ஸ்ரீரஞ்சனி)யாக மாறும்போது-கிஷோர், ‘அல்சைமர்’ (ஞாபக மறதி) நோயாளி ஆகிறார். சில சமயங்களில் தன் கூடவே வசிக்கும் மனைவி யார்? என்பதை கூட மறந்து விடுகிறார். மனதளவில் இன்னமும் இருபது வயது கணவராகவே வாழ்கிறார்.

இந்த சமயத்தில்தான் அந்த பேய் மழை பெய்து பெரும் நாசம் ஏற்படுத்துகிறது. மறதி நோயாளியான கணவர் கிஷோர் செய்யும் சின்ன சின்ன தவறுகளை சகித்துக் கொண்டு, அவரை ஒரு சின்ன குழந்தையைப்போல் கருதி, மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார், மனைவி ஸ்ரீரஞ்சனி. மழைக்கு பயந்து அக்கம்பக்கத்தினர் அனைவரும் வீடுகளை காலி செய்து விட்டு, பாதுகாப்பான இடம் தேடி சென்று விடுகிறார்கள்.

இந்த நிலையில், கிஷோர்-ஸ்ரீரஞ்சனி வசிக்கும் வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்து விடுகிறது. இருவரும் என்ன ஆனார்கள்? என்பது படம் பார்ப்பவர்களை இருக்கை நுனியில் அமரவைக்கும் பதற்றமான ‘கிளைமாக்ஸ்.’

அந்த மனைவி கதாபாத்திரத்துக்கு ஸ்ரீரஞ்சனி, மிக பொருத்தமான தேர்வு. சாந்தமான அவர் முகமும், பொறுமையான சுபாவமும் முதுமையான ‘ராதா’ கதாபாத்திரத்துக்கு ஒத்துழைத்து இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால், சிறந்த குணச்சித்ர கதாபாத்திரமாக வாழ்ந்து காட்ட முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார், ஸ்ரீரஞ்சனி. ‘அல்சைமர்’ நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், முன்னாள் ராணுவ அதிகாரி என்ற கம்பீரத்துடன் படம் முழுக்க வருகிறார், ‘ஆடுகளம்’ கிஷோர்.

இவர்களின் மலரும் நினைவுகளில், ‘பசங்க’ கிஷோர்-லவ்லின் சந்திரசேகர் இருவரும் அவ்வப்போது மனதை வருடிக் கொடுக்கிறார்கள். ஜிப்ரானின் பின்னணி இசையும், கிருஷ்ணாசேகரின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்து இருக்கின்றன. இருவரும் சேர்ந்து கொட்டும் மழைக்குள் அமர்ந்திருந்த உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. இரண்டு கதாபாத்திரங்கள், நான்கு நடிகர்களை வைத்துக் கொண்டு உணர்வுப்பூர்வமாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் லட்சுமி ராமகிருஷ்ணன். ராதா-வாசுதேவனுடன், பேய்மழையும் (வில்லனாக) ஒரு கதாபாத்திரமாக ஆக்ரோஷம் காட்டியிருக்கிறது. அந்த வயதான தம்பதிகளின் முடிவை படமாக்கியிருக்கும் விதம், சோகமான கவிதை.

‘ஹவுஸ் ஓனர்’ மூலம் தமிழ் சினிமாவின் சிறந்த டைரக்டர்கள் பட்டியலில், லட்சுமி ராமகிருஷ்ணனும் இடம் பிடித்து விட்டார்.

Next Story