15 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன ஒரு இளைஞன் படம் தம்பி - விமர்சனம்


15 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன ஒரு இளைஞன் படம் தம்பி - விமர்சனம்
x
தினத்தந்தி 10 Jan 2020 2:32 PM GMT (Updated: 10 Jan 2020 2:32 PM GMT)

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிப்பில் உருவாகி உள்ள ‘தம்பி’ படத்தின் விமர்சனம்.

கதையின் கரு:  சத்யராஜ், நல்ல அரசியல்வாதி. அவருடைய மகள், ஜோதிகா. மனைவி, சீதா. அம்மா, சவுகார்ஜானகி. இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். அவருடைய மகன் சரவணன் 15 வருடங்களுக்கு முன்பு காணாமல் போகிறான். ஒட்டு மொத்த குடும்பமும் அந்த கவலையில் இருக்கிறது.

ஒரு சந்தர்ப்பத்தில், சரவணனாக கார்த்தியை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வருகிறார், சத்யராஜ். கார்த்தியை ஜோதிகா சந்தேகத்துடன் பார்க்கிறார். ஜோதிகாவுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று கண்டுபிடித்து, அவருடைய மனதிலும், நல்ல தம்பியாக கார்த்தி இடம் பிடிக்கிறார். இந்த நிலையில், கார்த்தியை ஒரு கும்பல் கொல்ல முயற்சிக்கிறது. அதில் இருந்து கார்த்தி தப்புகிறார். அடுத்து சத்யராஜை கொல்ல துணிகிறார்கள். அந்த கும்பலை விசாரித்ததில், கார்த்திக்கு சில உண்மைகள் தெரியவருகிறது.

சத்யராஜின் வீட்டை விட்டு கார்த்தி வெளியேறுகிறார். உண்மையில் அவர் யார், காணாமல் போன சரவணன்தானா அல்லது சரவணனாக நடித்தாரா? சரவணன் என்ன ஆனார்? என்ற கேள்விகளுக்கு பதில் மீதி படத்தில் இருக்கிறது.

காணாமல் போன சரவணனாக கார்த்தி வருகிறார். தன்னை பற்றி தானே சந்தேகிப்பது, மனசாட்சியுடன் பேசுவது, குதிரை சவாரி தெரியாமல் குதிரை மீது ஏற்றப்பட்டு பயத்தில் அலறுவது, சந்தேகத்துக்கு உரியவராக இருந்தாலும், சத்யராஜுக்காகவும், ஜோதிகாவுக்காகவும் எதிரிகளுடன் மோதுவது என கார்த்திக்கு படம் முழுக்க வருகிற கனமான கதாபாத்திரம்.

அதை கச்சிதமாக செய்து, கதையுடனும், சரவணன் கதாபாத்திரத்துடனும் ஒன்ற வைக்கிறார், கார்த்தி. சண்டை காட்சிகளில், பதற வைக்கிறார்.

கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா. கார்த்தியை கண்களால் சந்தேகிப்பது, பிறந்தநாள் ஏற்பாடு மற்றும் புளியம்பழங்களை பார்த்து கார்த்தியை தம்பியாக நம்புவது, “இன்னொரு தம்பியை இழக்க விரும்பவில்லை” என்று கண்கலங்க கூறுவது ஆகிய காட்சிகளில், அவருடைய பெயரைப் போலவே நடிப்பிலும் பிரகாசம். அவர் குதிரை மீது வருவதை பார்த்து என்னவோ செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றம். நிகிலா விமலுக்கு அதிக வேலை இல்லை.

அரசியல்வாதியாக, குடும்ப தலைவராக, ஊர் பெரிய மனிதராக சத்யராஜ் நடிப்பில், கம்பீரம். அவருடைய இன்னொரு முகம், எதிர்பாராத திருப்பம். இளம் போலீஸ் அதிகாரியாக வரும் புதுமுகம் அன்சானிடம் போலீஸ் மிடுக்கு நிறைய... வில்லன் மணிமாறனாக பாலா, மிரட்டல். நடக்க முடியாதவராக-வாய் பேச முடியாதவராக-படம் முழுக்க சக்கர நாற்காலியில் வந்தாலும், சவுகார்ஜானகியின் முகமே வசனங்களை பேசி விடுகிறது.

கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் மென்மையான ராகங்கள் என்றாலும், பாடல்கள் வரும்போதெல்லாம் பார்வையாளர்கள் எழுந்து போகிறார்கள். பின்னணி இசை, காட்சிகளுக்கு தகுந்தபடி இசைந்து இருக்கிறது. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில், மார்கழி மாத ஜில்லிப்பு. காணாமல் போன கதாபாத்திரத்தில் இன்னொரு கதாபாத்திரம் வந்து நடிப்பது புதுசு அல்ல என்றாலும், திரைக்கதையும், சம்பவங்களும் புதுசாக இருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் ஜீத்து ஜோசப். இடைவேளைக்குப்பின், கதை யூகிக்க முடியாத திருப்பங்களுடன் பயணிக்கிறது. ‘கிளைமாக்ஸ்,’ சுகமான முடிவு.

Next Story