ஒரு இளம்பெண்ணும், வயதான கதாநாயகனும்: அவர்களுக்குள் ஏற்பட்ட உறவு என்ன? படம் - மீண்டும் ஒரு மரியாதை


ஒரு இளம்பெண்ணும், வயதான  கதாநாயகனும்: அவர்களுக்குள் ஏற்பட்ட உறவு என்ன? படம் - மீண்டும் ஒரு மரியாதை
x
தினத்தந்தி 25 Feb 2020 12:21 AM GMT (Updated: 25 Feb 2020 12:21 AM GMT)

பாரதிராஜாவின் மகன் லண்டனில் வேலைக்கு சென்று அங்கேயே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகனால் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார் பாரதிராஜா. "மீண்டும் ஒரு மரியாதை" படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.

தேனியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் எழுத்தாளர் பாரதிராஜாவின் மகன் லண்டனில் வேலைக்கு சென்று அங்கேயே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பாரதிராஜாவையும் லண்டனுக்கு அழைத்து சென்று தனது வீட்டில் தங்க வைக்கிறார்.

ஒரு சூழலில் மகனால் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார் பாரதிராஜா. அங்கு செல்வந்தர் ஜோ மல்லூரியின் நட்பு கிடைக்கிறது. அவர் தனது குடும்பத்தினரிடம் சேர்க்கும்படி ஒரு உயிலை எழுதி பாரதிராஜாவிடம் கொடுத்து விட்டு இறக்கிறார். ஆசிரமத்தை விட்டு வெளியேறும் பாரதிராஜா தற்கொலைக்கு தூணியும் ராசி நட்சத்திராவை காப்பாற்றுகிறார்.

தன்னுடன் பத்து நாட்கள் பயணிக்கும்படியும் அப்போதும் வாழ பிடிக்கவில்லை என்றால் நானே கொன்று விடுகிறேன் என்றும் சொல்லி அழைத்து செல்கிறார். அந்த பயணத்தில் ராசி நட்சத்திராவுக்கு வாழ்க்கையில் பிடிப்பு வந்ததா? அவர்களுக்குள் ஏற்பட்ட உறவு என்ன? என்பது மீதி கதை.

மொத்த கதையையும் தூக்கி சுமக்கும் கதையின் நாயகனாக வருகிறார் பாரதிராஜா. முதியோர் இல்லத்தில் சேர்த்ததை நினைத்து கலங்கும்போதும், வயதாகும்போது இதே நிலைக்கு ஆளாகும் நிலை வரலாம் என்று மகனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு வெளியேறும்போதும், நிராகரிக்கப்பட்ட தந்தையின் வலிகளை இயல்பாக வெளிப்படுத்துகிறார்.

சாக துணியும் ராசி நட்சத்திராவுக்கு வாழ்க்கையின் அழகை ரசிக்க சொல்லி கொடுக்கும் காட்சிகள் அம்சம். கிளைமாக்சில் ராசி நட்சத்திராவின் தகாத ஆசையை பார்த்து பதறுவதும், பிறகு புத்தி சொல்வதிலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்துகிறார் பாரதிராஜா. துறுதுறுவென வரும் ராசி நட்சத்திராவின் குறும்புத்தனங்கள் ரசிக்க வைக்கின்றன.

பாடல் காட்சிகளில் வசீகரிக்கிறார். பாரதிராஜா பிரிவை நினைத்து கலங்குவதில் உருக்கம். மவுனிகா சிறிது நேரம் வந்தாலும் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார். பெரும்பகுதி கதை பயணத்திலேயே கழிவது நெருடல்.

ரகுநந்தன் இசையில் பாடல்கள் மனதில் நிற்கின்றன. சாலை சகாதேவன் கேமரா லண்டன் அழகை அள்ளியுள்ளது. தற்கொலைக்கு எதிராகவும், வயதானோரை ஒதுக்கும் சமூக அவலங்களை சாடியும் சமூக அக்கறையோடு அழுத்தமான கதையை கொடுத்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

Next Story