பந்துவீச்சில் தடுமாறும் சென்னை அணி- களத்துக்கு திரும்பும் நம்பிக்கை நட்சத்திரம்? -வெளியான தகவல்
தீபக் சாகர் ஐபிஎல் போட்டிகளுக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை,
15-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை அணி தங்கள் முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது. அதன் பிறகு லக்னோ அணியுடன் நடந்த 2-வது போட்டியில் முதல் பேட்டிங் செய்த சென்னை அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தும் பந்துவீச்சில் கோட்டைவிட்டதால் தோல்வியை தழுவியது.
சென்னை அணியின் அனுபவ பந்துவீச்சாளரான தீபக் சாகர் அணியில் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளாக பவர்பிளே ஓவர்களில் சென்னை அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வந்தவர் தீபக் சாகர்.
இவரை இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி ரூ.14 கோடி கொடுத்து ஏலம் எடுத்தது. இருப்பினும் தற்போது வரை அவர் காயம் காரணமாக போட்டியில் இந்த ஆண்டு பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் தற்போது தீபக் சாகர் ஐபிஎல் போட்டிகளுக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் இருக்கும் தீபக் சாகர் கடந்த வாரமே பந்துவீச துவங்கிவிட்டார் எனவும் இருப்பினும் அவருக்கு காயம் முழுமையாக குணமடையவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவரது காயம் முழுமையாக சரியாக இந்த மாதம் 22 தேதி வரை ஆகும் எனவும் அதன் பிறகு அவர் உடல்தகுதி தேர்வை முடித்துவிட்டு ஏப்ரல் 25ஆம் தேதி அணிக்கு திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story