அந்தியூர் அருகே தம்பியை கொன்ற அண்ணன் கைது போலீசில் பரபரப்பு வாக்குமூலம்


அந்தியூர் அருகே தம்பியை கொன்ற அண்ணன் கைது போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 19 Dec 2016 10:00 PM GMT (Updated: 19 Dec 2016 7:28 PM GMT)

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் காந்திஜி வீதியை சேர்ந்தவர் சிவநாதன். இவருடைய மனைவி ஜெயம்மா. இவர்களுடைய மகன்கள் ஜெகநாதன் (35), கணேசன் (வயது 32). இதில் ஜெகநாதன் நெசவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். திருமணம் ஆகி தந்தை வீடு அருகே தன

அந்தியூர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் காந்திஜி வீதியை சேர்ந்தவர் சிவநாதன். இவருடைய மனைவி ஜெயம்மா. இவர்களுடைய மகன்கள் ஜெகநாதன் (35), கணேசன் (வயது 32). இதில் ஜெகநாதன் நெசவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். திருமணம் ஆகி தந்தை வீடு அருகே தனியாக வசித்து வருகிறார். கணேசன் தையல் தொழிலாளி. இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். கணேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இந்தநிலையில் கணேசன் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தம்பி கணேசனை கொலை செய்ததாக கூறி அவரது அண்ணன் ஜெகநாதன் அந்தியூர் கிராம நிர்வாக அதிகாரி சதீசிடம் நேற்று காலை சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து ஜெகநாதன் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் ஜெகநாதனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–

என்னுடைய தம்பி கணேசன் 3 நாட்களுக்கு முன்பு எனது பெற்றோரிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தான். அதற்கு அவர்கள் பணம் இல்லை என்று கூறிவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவன் எனது பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டான். இதை கேள்விப்பட்ட நான் வீட்டுக்கு சென்று, கணேசனிடம் ‘ஏன், பெற்றோரை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினாய்?’ என்று கேட்டேன். இதனால் எனக்கும் அவனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், அருகில் கிடந்த கைத்தறிக்கு பயன்படுத்தப்படும் கட்டையை எடுத்து அவனது தலையில் ஓங்கி அடித்தேன். இதில் அவன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தான்.

இவ்வாறு ஜெகநாதன் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.


Next Story