குடிநீர் வழங்க கோரி கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு


குடிநீர் வழங்க கோரி கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Dec 2016 10:45 PM GMT (Updated: 19 Dec 2016 9:11 PM GMT)

குடிநீர் வழங்க கோரி கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு

கரூர்,

குடிநீர் வழங்க கோரி கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதி மக்கள் கலெக்டர் கோவிந்தராஜிடம் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கரூர் அருகே உள்ள விசுவநாதபுரி அண்ணா நகர் பகுதி மக்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த 6 மாதமாக குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இங்குள்ள ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. எனவே தினமும் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று கிணற்றில் தண்ணீர் எடுத்து வருகிறோம். இதனால் காலையில் குழந்தைகளை சரியான நேரத்தில் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. எனவே சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

புல்லரெங்கன்பட்டி

அதேபோன்று கடவூர் வட்டாரம் கொசூர் அருகே உள்ள புல்லரெங்கன்பட்டி பகுதி மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுவதாகவும், ஆழ்குழாய் கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார்கள் அனைத்தும் பழுதாகி விட்டது. இதை சரி செய்து குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி காலிக்குடங்களுடன் மனு கொடுக்க வந்தனர்.

அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட காசிபாளையம் மற்றும் முடிகணம் ஊர் பொது மக்கள் எங்கள் பகுதி மக்களுக்கு அமராவதி ஆற்று நீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அதே போன்று ஆழ் குழாய் மூலமும் தண்ணீர் எடுத்து வந்தோம். இந்த நிலையில் கடந்த 6 மாதமாக தண்ணீர் பிரச்சினை உள்ளது. எனவே காவிரி நீர் வழங்கி குடிநீர் பிரச்சினையை போக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பரபரப்பு

கரூர் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் கரூர் மாவட்டம் முழுவதும் விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறை உள்ளது. தற்போது அமராவதி அணையில் 38 அடி தண்ணீர் உள்ளது. எனவே அமராவதி அணையில் இருந்து கடை மடை பகுதி வரை செல்லும் அளவில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர்.

குடிநீர் வழங்க கோரி நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதி மக்கள் மனு கொடுக்க வந்ததால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

309 மனுக்கள்

இதேபோன்று முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 309 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் கோவிந்தராஜ் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவி

தொடர்ந்து வருவாய் துறையின் சார்பில் 28 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளையும், தனி நபர் விபத்துக்காப்பீடு திட்டத்தின் மூலம் தலா ரூ.50 ஆயிரம் வீதம் 4 பேருக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக் குனர் கோமகன், மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை ஆட்சியர் ஜான்சிராணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story