பா.ஜனதாவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்களாக அறிவிப்பு


பா.ஜனதாவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்களாக அறிவிப்பு
x
தினத்தந்தி 3 July 2017 11:00 PM GMT (Updated: 3 July 2017 8:42 PM GMT)

புதுவையில் பா.ஜனதாவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி நியமன எம்.எல்.ஏ.க்களாக அறிவிப்பு, மத்திய அரசு அதிரடி

புதுச்சேரி,

புதுவை சட்டமன்றத்துக்கு பாரதீய ஜனதாவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை வழக்கமாக புதுவையில் ஆளும் அரசு தேர்வு செய்து கவர்னருக்கு அனுப்பி வைக்கும். அந்த பெயர்களை கவர்னர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார். அதன்பின் அவர்கள் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்படுவார்கள்.

இந்தநிலையில் புதுவையில் 2017 சட்டமன்ற தேர்தல் முடிந்து ஓராண்டு ஆகிய நிலையிலும் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல், கவர்னர் கிரண்பெடியுடன் மோதல் போன்ற பல்வேறு காரணங்களால் இது தள்ளிப்போய் வந்தது. நியமன எம்.எல்.ஏ. மற்றும் வாரிய தலைவர் பதவி கேட்டு காங்கிரஸ் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோரை வலியுறுத்தி வந்தனர். ஆனால் மேற்கூறிய காரணங்களை காட்டி நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிப்பது தள்ளிப்போடப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பெயர்களை கவர்னர் கிரண்பெடி பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் பேட்டியளித்த கவர்னர் கிரண்பெடி கூட, நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த நியமன எம்.எல்.ஏ. பதவிக்கு பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வகணபதி ஆகியோர் பெயரை மத்திய அரசு பரி சீலனை செய்து வந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது புதுவை அரசுக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லிக்கு விரைந்து சென்று அதை தடுக்கும் முயற்சிகளை எடுத்தார். இதற்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான லட்சுமிநாராயணன், நியமன எம்.எல்.ஏ.க் களை நியமிக்க தடை விதிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இதற்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் 3 பேரையும் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த தகவல் நேற்று பிற்பகலில் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் தொடர்பாக புதுவை தலைமை செயலாளருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது மாநில அரசுக்கு தெரியாமல் மத்திய அரசு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்த விவகாரம் புதுவை ஆட்சியாளர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின்போது முதல்- அமைச்சராக இருந்த ரங்கசாமி பலமுறை நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் அப்போது மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு அனுமதி அளிக்கவில்லை. அதன்பின் மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபின் ஒரு நியமன எம்.எல்.ஏ. பதவியை பாரதீய ஜனதாவுக்கு கொடுத்து விட்டு 2 நியமன எம்.எல்.ஏ. பதவியை என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கொடுத்தார்.

ஆனால் இந்த முறை ஒரு நியமன எம்.எல்.ஏ. பதவியைக்கூட காங்கிரசாருக்கு கொடுக்காமல், அதுவும் மாநில அரசினை எந்தவிதத்திலும் கலக்காமல் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசே பாரதீய ஜனதா கட்சியினரை கொண்டு நிரப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற் படுத்தியுள்ளது. புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் நேற்று மாலை கவர்னர் மாளிகைக்கு சென்றனர். கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வந்த சாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘நான் கவர்னரின் செயலாளரை சந்திக்க சென்றேன். கவர்னரை சந்திக்க செல்லவில்லை. புதுவை சட்ட சபைக்கு நியமன எம்.எல்.ஏ.க்களாக நானும், கட்சியின் பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளோம். இதுகுறித்து அதிகாரபூர்வமாக செவ்வாய்க் கிழமை (இன்று) எங்களுக்கு தெரிவிக்கப்படும். புதுவை சட்டசபைக்கு எம்.எல்.ஏ.க்களை நியமிக்க தடைகேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.

Next Story