கொசு புழுக்கள் உற்பத்திக்கு காரணமான கடைக்காரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


கொசு புழுக்கள் உற்பத்திக்கு காரணமான கடைக்காரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 20 Oct 2017 11:00 PM GMT (Updated: 20 Oct 2017 9:33 PM GMT)

தாராபுரம் பகுதியில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொசு புழுக்கள் உற்பத்திக்கு காரணமான கடைக்காரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 14 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன.

அலங்கியம்,

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதுபோன்று தாராபுரத்திலும் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் இறந்துள்ளனர். இதனால் டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தாராபுரம் நகராட்சி ஆணையாளர் லட்சுமணன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் நேற்று டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்களுக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, தாராபுரம் உழவர் சந்தை அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த பழைய இரும்பு கடைக்கு அதிகாரிகள் சென்றனர். அங்கு ஏராளமான டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் திறந்த வெளியில் கிடந்தன. அவற்றில் மழைநீர் தேங்கி இருந்ததோடு, கொசு புழுக்களும் அதிக அளவில் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், உடனே அவற்றை சுத்தம் செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டனர் மேலும் கொசு புழுக்கள் உற்பத்திக்கு காரணமான அந்த கடை உரிமையாளர் நாகராஜனுக்கு (வயது 44) ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் குடியிருப்பு பகுதிகளில் இதுபோன்ற பழைய இரும்புகடை செயல்பட அனுமதி கிடையாது என்றும், இந்த கடையால் சுகாதார சீர்கேடு மற்றும் தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், கடையை உடனே காலி செய்ய வேண்டும் என்றும் கடைக்காரருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதுபோல் தாராபுரம் என்.ஜி.ஜி.ஓ. காலனி, பை-பாஸ் சாலை, அண்ணாநகர், ஜவுளிக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, கொசு உற்பத்தியாகும் வகையில் குடிநீரை பாதுகாப்பற்ற முறையில் சேகரித்து வைத்திருந்த பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினர் 14 பேருக்கு எச்சரிக்கை நோட்டீசும் வழங்கப்பட்டன.

இந்த ஆய்வு குறித்து நகராட்சி ஆணையாளர் லட்சுணன் கூறும்போது, “இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். கொசுப்புழுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகையில் ஆய்வுக்காக வீட்டுக்கு வரும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தேவையற்ற பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பிற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்“ என்றார். 

Related Tags :
Next Story