எடப்பாடியில் விசைத்தறி தொழிலாளி மர்ம சாவு போலீசார் விசாரணை


எடப்பாடியில் விசைத்தறி தொழிலாளி மர்ம சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 Feb 2018 3:09 AM GMT (Updated: 8 Feb 2018 3:09 AM GMT)

எடப்பாடியில் விசைத்தறி தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எடப்பாடி,

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (வயது 40). விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி மாலா (36). இவர்களுக்கு பூபதி (19) என்ற மகனும், கோகிலா (15) என்ற மகளும் உள்ளனர். தனபாலுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாம்பு கடித்ததில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று காலை தனபால் குடியிருக்கும் வீட்டின் அருகே தலையின் பின்புறம் ரத்தக்காயத்துடன் சாலையின் ஓரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சங்ககிரி துணை சூப்பிரண்டு அசோக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தனபால் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story