ரேஷன் அரிசி கடத்தியவர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது


ரேஷன் அரிசி கடத்தியவர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 19 Feb 2018 9:15 PM GMT (Updated: 19 Feb 2018 8:11 PM GMT)

ரேஷன்அரிசி கடத்தியவர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விழுப்புரம் அருகே பாணாம்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை போலீசார் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே வேனில் வந்த நபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் விழுப்புரம் விராட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சையது அபுதாகீர்(வயது 46) என்பதும், விழுப்புரம் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு வேனில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்றதும் தெரிந்தது. மேலும் அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன் அரிசி மூட்டைகளை வாகனங்களில் கடத்தி சென்று விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திய சையதுஅபுதாகீரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில் இவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால், அவருடைய கடத்தல் செயல்களை தடுக்கும் பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் பரிந்துரை செய்தனர். இதையடுத்து சையது அபுதாகீரை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Next Story