மீன்சுருட்டி அருகே குட்டையில் கிடந்த அம்மன் சிலை மீட்பு


மீன்சுருட்டி அருகே குட்டையில் கிடந்த அம்மன் சிலை மீட்பு
x
தினத்தந்தி 25 Feb 2018 11:00 PM GMT (Updated: 25 Feb 2018 9:07 PM GMT)

மீன்சுருட்டி அருகே குட்டையில் கிடந்த அம்மன் சிலை மீட்கப்பட்டது.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்து வெண்ணங்குழி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே ஒரு குட்டை உள்ளது. இந்த குட்டையில் வெண்ணங்குழி கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் நேற்று மீன் பிடிக்க சென்றனர். அப்போது அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுவன் காலில் பெரிய மீன் போன்று ஒன்று தென்பட்டது. இதையடுத்து அவன் அருகில் உள்ள நண்பர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளான். இதையடுத்து அங்கிருந்த சிறுவர்கள் ஒன்று சேர்ந்து அதை தூக்கி பார்த்தனர்.

அப்போது தான் அது மீன் இல்லை என்றும், சாக்கு மூட்டையில் ஏதோ உள்ளது என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அந்த மூட்டையை தூக்கி வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அந்த மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் ஒரு அம்மன் சிலை இரண்டு கைகள் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் கிராமத்தில் உள்ளவர்களிடம் இதுகுறித்து கூறினர். மேலும் மீன்சுருட்டி போலீஸ் மற்றும் வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) காமராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிலை வெண்கலத்திலான அம்மன் சிலை என்பது தெரியவந்தது.

மேலும் போலீசார் விசாரணையில், சிலையை திருடி மர்ம நபர்கள் சிலையில் உள்ள கைகளை இரண்டையும் அறுத்து விட்டு குட்டையில் போட்டுள்ளனர். பின்னர் அறுத்து கொண்டு போன சாமி கைகளை வைத்து அந்த சிலை ஜம்பொன் சிலையா? அல்லது வெண்கல சிலையா? என்பது குறித்து அறிந்த பின்னர் குட்டையில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று வீசி சென்று இருக்கலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அம்மன் சிலையை ஜெயங்கொண்டம் தாசில்தார் வேல்முருகனிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story