கரிவலம்வந்தநல்லூர் அருகே வெவ்வேறு இடங்களில் மணல் கடத்திய 3 பேர் கைது டிராக்டர்–மோட்டார் சைக்கிள் பறிமுதல்


கரிவலம்வந்தநல்லூர் அருகே வெவ்வேறு இடங்களில் மணல் கடத்திய 3 பேர் கைது டிராக்டர்–மோட்டார் சைக்கிள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 March 2018 8:30 PM GMT (Updated: 9 March 2018 12:51 PM GMT)

கரிவலம்வந்தநல்லூர் அருகே இரு வெவ்வேறு இடங்களில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில்,

கரிவலம்வந்தநல்லூர் அருகே இரு வெவ்வேறு இடங்களில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மணல் கடத்திய 2பேர் கைது


கரிவலம்வந்தநல்லூர் அருகில் உள்ள குலசேகரபேரியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரிச்சாமி(வயது48). இவரும் நடுமலையடிப்பட்டி மாரியப்பன் மகன் முத்துமணியும்(35) நேற்று டிராக்டரில் மணல் ஏற்றி கொண்டு வந்தனர். அந்த டிராக்டரை வழிமறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, அனுமதி இன்றி குலசேகரபேரி ஆற்றில் இருந்து அவர்கள் டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மணலுடன் டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு

இதேபோன்று, கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சுப்புலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் மகன் மாரியப்பனை(30) தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சாக்கு மூட்டையில் அவர் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் மணல் மூட்டையுடன் வந்தார். அவரை போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அவர் நிற்காமல் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி தப்பி சென்று விட்டார். விசாரணையில், அவர் சுப்புலாபுரம் அருகில் உள்ள மேலமரத்தோணியை சேர்ந்த செல்லையா மகன் சக்தி என தெரிய வந்தது. அவரை கரிவலம் வந்தநல்லூர் போலீசார் தேடிவருகின்றனர்.

Next Story