கணவன்-மனைவி போல நடித்து டாக்டரை தாக்கி கொள்ளை முயற்சி, 2 பேர் கைது


கணவன்-மனைவி போல நடித்து டாக்டரை தாக்கி கொள்ளை முயற்சி, 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 March 2018 12:00 AM GMT (Updated: 19 March 2018 7:57 PM GMT)

நண்பரை பெண் வேடம் போட வைத்து கணவன்-மனைவி போல நடித்து டாக்டர் வீட்டில் புகுந்து அவரையும், அவரது மனைவியையும் தாக்கி கொள்ளை முயற்சி நடந்தது.

சென்னை,

கணவன் - மனைவி போல நடித்த என்ஜினீயரும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர். சென்னை தியாகராயநகரில் நேற்று பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.

சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 74). டாக்டரான இவர், தனது மனைவி ஜெய்சித்ராவுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இவர் வீட்டு முன்பக்கம் உள்ள கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார்.

நேற்று பகலில் டாக்டர் ராதாகிருஷ்ணனும், அவரது மனைவி ஜெய்சித்ராவும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது கதவை தட்டும் சத்தம் கேட்டது. ராதாகிருஷ்ணன் கதவை திறந்தார். வெளியில் ஆண் ஒருவர் பெண்ணுடன் நின்று கொண்டிருந்தார். அவர்கள் தங்களை கணவன்- மனைவி என்றும், வீடு வாடகைக்கு வேண்டும் என்றும் கேட்டனர்.

ராதாகிருஷ்ணன் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். மனைவி என்று கூறிக்கொண்ட பெண் சுடிதார் அணிந்திருந்தார். சுடிதார் துப்பட்டாவினால் முகத்தின் வாய் பகுதியை மூடி இருந்தார். திடீரென்று துப்பட்டா விலகியதால், அவர் பெண் வேடத்தில் இருந்த ஆண் என்று தெரியவந்தது.

இதைப்பார்த்து ராதா கிருஷ்ணன் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர்களை வெளியே போகும்படி கூச்சல் போட்டார். உடனே கணவர் வேடத்தில் வந்தவர், ராதா கிருஷ்ணனை தாக்கினார். அவர் கீழே விழுந்தார். அவரது முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இதற்குள் கணவன்-மனைவி வேடம் பேட்டு வந்த மர்ம நபர்கள் இருவரும் வீட்டுக்குள் புகுந்தனர். சத்தம் கேட்டு வந்த ஜெய்சித்ராவையும் வாயை பொத்தி தாக்கினார்கள். அவரது முகத்தில் மயக்க பொடியை தூவினார்கள். அவர் சத்தம் போட்டுக்கொண்டே லேசாக மயக்கமாகி சோபாவில் சாய்ந்தார்.

இதற்குள் கீழே விழுந்து கிடந்த ராதாகிருஷ்ணன் எழுந்து வீட்டை விட்டு வெளியில் வந்து திருடன், திருடன், காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

நிலைமை மோசமானதால் கணவன்-மனைவி வேடத்தில் வந்த ஆசாமிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியில் வந்து தப்பி ஓடினார்கள். அவர்கள் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வந்துள்ளனர்.

தப்பி ஓடிய அவர்களை பொதுமக்கள் விரட்டினார்கள். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசாரும் விரட்டினார்கள். தப்பி ஓடிய ஆசாமிகள் இருவரும் பிடிபட்டனர். அவர்கள் இருவரும் பாண்டி பஜார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர் களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அவர்களில் ஒருவர் பெயர் பிரகாஷ் (வயது 29) என்று தெரியவந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை சேர்ந்தவர். என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர்தான் கணவர் வேடத்தில் வந்தவர். பெண் வேடம் போட்டு மனைவியாக வந்த நபரின் பெயர் சுஜாந்த் (வயது 19). இவர் பழனியைச் சேர்ந்தவர். சென்னையில் தங்கி உள்ள இவர்கள் கட்டிட வேலை செய்து வந்தனர். நண்பர்கள்.

ராதாகிருஷ்ணனும், அவரது மனைவியும் தனியாக வசிப்பதை தெரிந்துகொண்டு கொள்ளை அடிக்க வந்த அவர்கள் இருவரும் போலீசாரிடம் மாட்டிக்கொண்டனர். அவர்கள் இருவரும் வேறு கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்று தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இந்த சம்பவம் தியாகராய நகர் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story