கோடை சீசனையொட்டி ஊட்டியில் புகைப்பட கண்காட்சி தொடங்கியது


கோடை சீசனையொட்டி ஊட்டியில் புகைப்பட கண்காட்சி தொடங்கியது
x
தினத்தந்தி 8 May 2018 11:00 PM GMT (Updated: 8 May 2018 10:42 PM GMT)

கோடை சீசனையொட்டி ஊட்டியில் புகைப்பட கண்காட்சி தொடங்கியது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இந்த ஆண்டு கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். அதனை தொடர்ந்து சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை சார்பில் கோடை சீசனையொட்டி அரியவகை பறவைகள், வனவிலங்குகளின் புகைப்பட கண்காட்சி ஊட்டி சேரிங்கிராசில் உள்ள தோட்டக்கலை வளாகத்தில் தொடங்கியது. கண்காட்சியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, சுற்றுலா அலுவலர் ராஜன், வனச்சரகர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்காட்சியில் தேன்சிட்டு, நீலச்சிட்டு, மலர் கொத்தி, பச்சை சிட்டு, மாங்குயில், பட்டாணி குருவி, நீலகிரி காட்டுப்புறா, மஞ்சக்கால் புறா, பச்சைப்புறா, கிளி, குயில், மயில், மீன்கொத்தி, குருட்டு கொக்கு, சாம்பல் நாரை, கொண்டை நீர்க்காகம், நெட்டைக்காலி, வெள்ளை வாலாட்டி, வயல் கதிர்க்குருவி, சிட்டுக்குருவி, தினைக்குருவி, நிலம்வாழ் பறவைகளான கவுதாரி, கண்டாங் கோழி, வர்ணக்காடை, காட்டுக்கோழி, காட்டு சேவல் உள்பட பல்வேறு பறவைகளின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

நீலகிரி வாழ் விலங்குகளான காட்டு யானை, புள்ளி மான், சிறுத்தைப்புலி, புலி, மலபார் அணில், காட்டெருமை, நீலகிரி லங்கூர் குரங்கு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், நீர்வீழ்ச்சிகள், 200-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகள், படுகர், கோத்தர், தோடர், பனியர், குரும்பர் ஆகிய இன மக்களின் பாரம்பரிய திருவிழா புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன.

புகைப்பட கண்காட்சியை காண நுழைவு கட்டணம் எதுவும் இல்லை. இந்த கண்காட்சி வருகிற 31-ந் தேதி வரை நடைபெறும். 

Next Story