புதுக்கோட்டை அருகே இருதரப்பினர் மோதல்; வீட்டுக்கு தீ வைப்பு


புதுக்கோட்டை அருகே இருதரப்பினர் மோதல்; வீட்டுக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 11 May 2018 8:30 PM GMT (Updated: 11 May 2018 7:19 PM GMT)

புதுக்கோட்டை அருகே இருதரப்பினர் மோதிக் கொண்டதில் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது.

தூத்துக்குடி, 

புதுக்கோட்டை அருகே இருதரப்பினர் மோதிக் கொண்டதில் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

இருதரப்பினர் மோதல்

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி மகன் ஆறுமுகவேல் (வயது 29) கூலி தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (39) விவசாயி. நேற்று முன்தினம் முத்துகிருஷ்ணனின் தம்பி ராமநாதன் குடிபோதையில் ஆறுமுகவேலின் குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆறுமுகவேல், அவரது ஆதரவாளர்கள் முருகானந்தம், வேல்கனி, நமோ நாராயணன் ஆகியோர் சேர்ந்து முத்துகிருஷ்ணன், ராமநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு 2 பேரும் ஆறுமுகவேல் ஆதரவாளர்களை தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் ஆறுமுகவேல், முத்துகிருஷ்ணன் ஆகியோர் காயம் அடைந்தனர்.

வீட்டுக்கு தீ வைப்பு

இதற்கிடையே ஆத்திரம் தீராத முத்துகிருஷ்ணன், ராமநாதன் ஆகியோர் ஆறுமுகவேல் வீட்டுக்கு தீ வைத்தனர். இதில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள், வீட்டில் இருந்த சேர், கட்டில் போன்றவை தீயில் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து இருதரப்பினர் தனித்தனியாக புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர். புகார்களின் பேரில் புதுக்கோட்டை போலீசார், முத்துகிருஷ்ணன், ராமநாதன், ஆறுமுகவேல், முருகானந்தம், வேல்கனி, நமோ நாராயணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story