கரூரில் முதன் முதலாக ரூ.39¾ லட்சத்தில் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்


கரூரில் முதன் முதலாக ரூ.39¾ லட்சத்தில் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 11 May 2018 8:46 PM GMT (Updated: 11 May 2018 8:46 PM GMT)

கரூரில் முதன் முதலாக ரூ.39¾ லட்சத்தில் அமைக்கப்பட்ட கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

கரூர், 

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முதன்முதலாக ரூ.39 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுடன் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் மற்றும் கார் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் (லைசன்ஸ்) கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த ஓடுதளத்தில் தான் வாகன ஓட்டும் திறன் சோதிக்கப்படுகிறது. போக்குவரத்து துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே சி.சி.டி.வி. கேமரா மூலமாக சாலை விதிகளை பின்பற்றி அந்த ஓடுதளத்தில் வாகனம் ஓட்டுகின்றனரா? என்பதை கண்காணிக்கின்றனர்.

கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே...

அந்த வகையில் கரூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், புதிதாக அமைக்கப்பட்ட கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

தமிழக போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலர் மற்றும் போக்குவரத்துத்துறை ஆணையர் சமயமூர்த்தி, மாவட்ட கலெக்டர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் சென்று கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளத்தை அமைச்சர் பார்வையிட்டு அது செயல்படும் விதம் பற்றி கேட்டறிந்தார். மேலும் ஓட்டுனர் உரிமம் பெறுபவர்களின் வாகனம் ஓட்டும் திறனை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே சோதித்து பார்த்து தேர்வு செய்வது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

சாலை விதி

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியபோது கூறியதாவது:-

கரூர் மாவட்டத்திலுள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவர்களால் மென்பொருள் மூலம் இந்த ஓட்டுனர் தேர்வுதளம் வடிவமைக்கப்பட்டிருப்பது நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய ஒன்றாகும். இந்தியாவிலேயே ஆண்டுக்கு 1½ லட்சம் பேர் விபத்து சம்பவங்களில் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதை வைத்து பார்க்கையில் நாம் பல்வேறு வகையில் முன்னேற்ற பாதையில் சென்றாலும் சாலை விதிகளை கடைபிடிப்பதில் மோசமான நிலையிலேயே இருக்கிறோம் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வாகன உற்பத்தி அதிகம் இருப்பதால் 2½ கோடி வாகனங்கள் இயங்குகின்றன. இதனால் விபத்துகளில் சிக்கி ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழக்கின்றனர்.

எனவே நாம் இதனை சிந்தித்து பார்த்து சாலை விதிகளை கடைபிடிப்பது எவ்வளவு அவசியம் என்பதை உணர வேண்டும்.

முன்னோடியாக உள்ளது

தொழில்துறை, கல்விதுறை, போக்குவரத்து துறை என பல்வேறு துறைகளிலும் முன்னேற்றமடைந்து வரும் தமிழகம் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. எனவே விபத்துகளை தடுப்பதில் கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவு, கடந்த ஆண்டு விபத்துகளில் உயிரிழப்பு 6 சதவிதம் குறைந்தது. தமிழகத்தில் விபத்துகளால் உயிரிழப்பவர்கள் பெரும்பாலானோர் 15 வயது முதல் 40 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஆண்கள் தான் அதிகம். எனவே ஹெல்மெட் அணிவது, காரில் செல்லும் போது சீட்பெல்ட் அணிவது, மது அருந்தாமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவற்றை முறையாக கடைபிடித்தால் சாலை விபத்துகளை தடுக்கலாம். சாலை விபத்தினை குறைக்க அரசாங்கம் சட்டம் இயற்றலாம்.

ஆனால் தனிமனித ஒழுக்கத்துடன் ஒவ்வொருவரும் செயல்பட்டு விதிகளை பின்பற்றினால் தான் சாலை விபத்தினை குறைக்க முடியும். மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வேண்டும் என்பதற்காக புதிய பாடத்திட்டத்தில் கூட அதை சேர்க்க வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

14 நகரங்களில் அமைக்கப்படும்

இந்த நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலர் மற்றும் போக்குவரத்து ஆணையருமான சமயமூர்த்தி பேசுகையில், தமிழகத்தில் அதிகப்படியாக வாகனங்கள் உள்ளதால் நாள் ஒன்றுக்கு 7,000 வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. அதிக வாகனம் உற்பத்தியும், பதிவும் உள்ளதால் சாலை விதிகளை குறைப்பதற்காக உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து கண்காணித்து வருகிறது. சாலை விபத்தினை குறைப்பதற்காக மிக துல்லியமாக கணிக்கக்கூடிய முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டுனர்களின் திறமை நன்கு அறியப்பட்ட பிறகே உரிமம் வழங்கப்படும்.

படிப்படியாக 14 நகரங்களில் கணினி மயமாக்கப்பட்ட தேர்வுதளம் அமைக்க திட்டமிட்டு உள்ளோம் என்று கூறினார். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளத்தில் திறமையை நிரூபித்து ஓட்டுனர் உரிமம் பெற எளிதில் தேர்வாகி விடுவோமா? என்கிற சந்தேக கண்ணோட்டத்தில் பலர் அது தொடங்கப்படுவதற்கு முன்பாகவே உரிமம் பெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கு வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலந்து கொண்டவர்கள்

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், போக்குவரத்து இணை ஆணையர்கள் சிவக்குமரன், வேலுச்சாமி, துணை ஆணையர் உமாசக்தி, வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்பிரமணியன், எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி தாளாளர் ராமகிருஷ்ணன், லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் ராஜ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story