பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்த குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு


பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்த குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 14 May 2018 11:00 PM GMT (Updated: 14 May 2018 10:11 PM GMT)

பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பசும்பலூர் மேற்கு காலனியை சேர்ந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பசும்பலூர் மேற்கு காலனியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்களை போலீசார் கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் போலீசார் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வேண்டுமென்றால் ஒரு சிலர் தான் செல்ல வேண்டும் என்றனர்.

இதையடுத்து பசும்பலூர் மேற்கு காலனியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் மட்டும் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், பசும்பலூர் மேற்கு காலனியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். எங்கள் பகுதியில் பள்ளிக்கூடம், ரேஷன் கடை, சிறுவர்கள் விளையாட்டு மைதானம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவை கட்டுவதற்காக ஒதுக்கி உள்ள பொது இடத்தை ஒரு குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றுள்ளனர். இதனை நாங்கள் கேட்டால் அந்த குடும்பத்தினர் போலீசார் துணையுடன் வந்து மிரட்டுகிறார்கள். இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகிறோம். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த பாடில்லை. எனவே கலெக்டர் அந்த பட்டாவை ரத்து செய்து ஆக்கிரமிப்பு செய்த குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதேபோல் குரும்பலூர் வடக்கு அருந்ததியர் தெரு 9-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் உள்ள தார்ச்சாலை குண்டும், குழியுமாக உள்ளது.

இதனால் அந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் அந்த சாலையை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே அந்த குண்டும், குழியுமான சாலையை சீரமைத்தும், சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா கிழுமத்தூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த மல்லிகா தனது தந்தையுடன் வந்து மனு கொடுத்தார். அதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவுக்கு தோட்ட வேலைக்கு சென்ற தனது கணவர் செல்வம் தினமும் என்னிடம் செல்போனில் பேசுவார். ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் அவர் என்னிடமும், உறவினருடமும் செல்போனில் பேசவில்லை. அவர் மலேசியாவில் இருக்காரா? இல்லையா? என்பது தெரியவில்லை. எனக்கு 3 குழந்தைகள் உள்ளது. அவர்கள் என்னிடம் தந்தை எப்போது செல்போனில் பேசுவார், எப்போது வீட்டிற்கு வருவார் என்று தினமும் கேட்கிறார்கள். எனவே என்னுடைய கணவர் செல்வம் மலேசியாவில் தான் இருக்கிறாரா? என்பதை உறுதி செய்து அவரை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேற்கண்ட மனுக்களை பெற்ற கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story