சாத்தனூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்பு


சாத்தனூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்பு
x
தினத்தந்தி 14 May 2018 11:00 PM GMT (Updated: 14 May 2018 10:11 PM GMT)

சாத்தனூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

தண்டராம்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன்மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதியை பெற்று வருகின்றன. அதாவது 100 கிராமங்கள் சாத்தனூர் அணை தண்ணீரை பெற்று பயனடைந்து வருகின்றன.

இதேபோல் சிறிய, பெரிய ஏரிகளும் நீர் ஆதாரங்களை பெறுவதோடு தண்டராம்பட்டு, தானிப்பாடி, புதுப்பாளையம் ஆகிய கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும், திருவண்ணாமலை நகர குடிநீர் வசதிக்கும் சாத்தனூர் அணை ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை பெய்து அணையின் கொள்ளளவான 119 அடி நிரம்பியது. எனவே, கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி முதல் மே மாதம் 8-ந் தேதி வரை சாத்தனூர் அணையின் இடதுபுற கால்வாய் மூலம் 350 கனஅடி நீரும், வலதுபுற கால்வாய் மூலம் 220 கனஅடி நீரும் தொடர்ந்து 90 நாட்கள் திறந்து விடப்பட்டது.

தற்போது 2-ம் போகத்திற்கான பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில் கோடை வெயில் அதிகமாக உள்ளதால், கூடுதலாக தண்ணீரை திறந்து விடும்படி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அரசு அனுமதி பெற்று 5 நாட்களுக்கு சாத்தனூர் அணை தண்ணீரை திறந்து விட பொதுப் பணித்துறைக்கு உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று காலை சாத்தனூர் அணையின் இடதுபுற கால்வாயில் 350 கன அடிநீரும், வலது புற கால்வாயில் 220 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டது. வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி வரை இந்த தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதற்காக நேற்று நடைபெற்ற அணை திறப்பு நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு அணையின் பாசன கால்வாயை திறந்து விட்டனர்.

இதில் மு.பெ.கிரி எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, சாத்தனூர் அணை கோட்ட செயற்பொறியாளர் ஆர்.மணிமோகன், உதவி செயற்பொறியாளர் பி.வி.ராஜன், உதவி பொறியாளர்கள் கே.செல்வராஜ், ஜெ.கேசவராஜ், பி.ராஜேஷ், திருவண்ணாமலை அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், நகர செயலாளர் செல்வம், சாத்தனூர் பாசன கால்வாய் சங்க தலைவர் ஜெயராமன், விவசாய சங்க பிரதிநிதி தண்டராம்பட்டு வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். 2-ம் கட்டமாக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதன் மூலம் 246 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படுகிறது. தற்போது சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 82.35 அடியாக உள்ளது. அதாவது 1,710 மில்லியன் கனஅடி நீர் இருப்பில் உள்ளது. 

Next Story