துபாயில் தவிக்கும் 7 பேரை மீட்டுத்தாருங்கள்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனு


துபாயில் தவிக்கும் 7 பேரை மீட்டுத்தாருங்கள்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனு
x
தினத்தந்தி 15 May 2018 12:15 AM GMT (Updated: 14 May 2018 11:24 PM GMT)

துபாயில் தவிக்கும் 7 பேரை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவரக்கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை அருப்புக்காடு ரமேஷ், நயினாமரைக்கான் சக்திபுரம் சரவணன், கொல்லன்தோப்பு வெள்ளைச்சாமி, கடலாடி அவத்தாண்டை காசி, பனிவாசல் ரமேஷ், நல்லூர் முத்துராமலிங்கம், மற்றும் விருதுநகர் மாவட்டம் ஆவுடையாபுரம் முகமது கசாலி ஆகியோரின் குடும்பத்தினர் உள்பட மாற்றுத்திறனாளி பெண், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

இவர்கள் திரளாக கலெக்டர் நடராஜனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

 மேற்கண்ட 7 பேரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துபாய் நாட்டிற்கு சென்றனர். அங்குள்ள நிறுவனத்தில் துப்புரவு பணிக்காக அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு சொன்னபடி நிறுவனத்தில் வேலை கொடுக்காமல் வேறு நிறுவனத்தில் வேலை கொடுத்துள்ளனர். இந்த நிறுவனத்தின் உரிமம் முடிந்துவிட்டதால் வேலை இல்லாமல், சம்பளம் கிடைக்காமல் சாப்பாட்டிற்கே அவதிப்பட்டுஉள்ளனர்.

இதுகுறித்து கம்பெனி நிர்வாகத்திடம் கேட்டபோது முறையான பதில் சொல்லாமல் வீட்டு சிறையில் வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால் அங்கிருந்து தப்பிய 7 பேரும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று பதுங்கி வாழ்ந்து வந்துள்ளனர். தங்களின் நிலை குறித்து விளக்கி வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பிஉள்ளனர்.

இதனை கண்ட அங்குள்ள உறவினர்கள் மற்றும் தமிழர்கள் மனிதாபிமானத்துடன் அங்கு சென்று காட்டில் பதுங்கி இருந்து சாப்பிடக்கூட வழியில்லாமல் சிக்கியவர்களை மீட்டு தங்களின் இருப்பிடத்திற்கு அழைத்து சென்று தங்களால் இயன்ற அளவு உதவி உள்ளனர். எங்களை காப்பாற்றுவதற்காக வெளிநாடு வேலைக்கு சென்றவர்கள் அங்கு பரிதவித்து வருகின்றனர்.

எனவே உடனடியாக அவர்களை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடராஜன் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று துபாய் நாட்டில் தவிப்பவர்களை மீட்டு கொண்டுவருவதாக உறுதி அளித்தார். 

Next Story