கோரையாற்றில் மணல் குவாரி அமைக்கும் பணி தீவிரம் கடத்தலை தடுக்க நடவடிக்கை


கோரையாற்றில் மணல் குவாரி அமைக்கும் பணி தீவிரம் கடத்தலை தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 15 May 2018 10:45 PM GMT (Updated: 15 May 2018 9:30 PM GMT)

ஆவூர் அருகே கோரையாற்றில் மணல் குவாரி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மேலும் மணல் கடத்தலை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆவூர்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் அருகே உள்ள மதயானைப்பட்டி கலிமங்களம், கத்தலூர் வில்லாரோடை, ஆத்துப்பட்டி, கல்லுப்பட்டி, மங்களாப்பட்டி, கோங்குடிப்பட்டி ஆகிய பகுதிகளை ஒட்டியுள்ள கோரையாற்றுப்பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அனுமதியின்றி அதிக அளவில் மணல் அள்ளி வெளிமாவட்டங்களுக்கு கடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், இலுப்பூர் கோட்டாட்சியர் ஜெயபாரதி மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மணல் கடத்தலை தடுக்க அங்கு அரசு மணல் குவாரி அமைப்பது என்று முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அங்கு மூன்று இடங்களில் குவாரி அமைப்பதற்கான அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது. தொடர்ந்து மணல் அள்ளக்கூடிய ஆற்றுப்பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்றுதல் லாரிகள் மூலம் மணல் ஏற்றிச்செல்வதற்கான பாதை அமைத்தல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் தீவிரமாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணி பகல் நேரத்தில் காலையில் இருந்து மாலை ஆறு மணிவரை நடந்து வருகிறது.

இரவு நேரங்களில்...

இந்நிலையில் குவாரி அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைத்து வைத்துள்ள பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் வழக்கம்போலவே மணல் கொள்ளையர்கள் லாரிகள் டிராக்டர்கள் மூலம் மணல் அள்ளி கடத்துவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து குவாரி சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர் கூறும்போது பகல் நேரத்தில் மணல் குவாரிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்துவிட்டு சென்றுவிடுகிறோம் இரவு நேரங்களில் அப்பகுதியில் மணலை அள்ளி கடத்துகிறார்கள். என்றனர்.மேலும் மதயானைப்பட்டி கோரையாற்றுப்பகுதியில் அரசு மணல் குவாரிகள் அமைக்க முடிவு செய்த பின்பும் மணல் கடத்தல்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறுவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். 

Next Story