காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் மிரட்டுகிறார்கள் - பரமேஸ்வர் பரபரப்பு குற்றச்சாட்டு


காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் மிரட்டுகிறார்கள் - பரமேஸ்வர் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 May 2018 11:15 PM GMT (Updated: 16 May 2018 10:50 PM GMT)

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் மிரட்டுவதாக பரமேஸ்வர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

பெங்களூரு,

ஆட்சியை பிடிக்க பணம், பதவி தருவதாக கூறுவதுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் மிரட்டுகிறார்கள் என்று மாநில தலைவர் பரமேஸ்வர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. ஆனால் 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா ஆட்சியை பிடிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக ஆபரேசன் தாமரை திட்டத்தை கையில் எடுத்து காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவுக்கு இழுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணியில் 116 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதனால் எங்கள் கூட்டணி கட்சிகளுக்கு தான் தனி பெரும்பான்மை இருக்கிறது. பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்றாலும், அக்கட்சிக்கு தனி பெரும்பான்மை இல்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவுக்குள் இழுக்க, அக்கட்சி தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பணம், பிற பதவிகளை தருவதாகவும் கூறியுள்ளனர். வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்தப்படும் என்றும் எங்கள் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் மிரட்டுகிறார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எந்த எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டார்கள். இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Next Story