திருட்டில் ஈடுபட்டு வந்த 9 சிறுவர்கள் கைது


திருட்டில் ஈடுபட்டு வந்த 9 சிறுவர்கள் கைது
x
தினத்தந்தி 17 May 2018 11:37 PM GMT (Updated: 17 May 2018 11:37 PM GMT)

விதவிதமான மோட்டார் சைக்கிள் ஓட்ட ஆசைப்பட்டு திருட்டில் ஈடுபட்டு வந்த 9 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தானே,

சிறுவர்களிடம் இருந்து போலீசார் 27 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

தானே பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு குறித்து அதிக புகார்கள் வந்தன. இந்தநிலையில் சில நாட்களுக்கு முன் தானே பகுதியில் 2 சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றை ரோட்டில் நிறுத்திவிட்டு செல்ல முயன்றனர். இதை கவனித்த பொது மக்கள் சிலர் சிறுவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து அவர்களை பிடித்தனர்.

பின்னர் அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில் பிடிபட்ட சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்ட கொள்ளை ஆசை கொண்டவர்கள். அவர்கள் விதவிதமான மோட்டார் சைக்கிள்களை ஓட்டிப்பார்க்க ஆசைப்பட்டு உள்ளனர். எனவே அவர்கள் கள்ளச்சாவி மூலம் ரோட்டில் நிற்கும் மோட்டார் சைக்கிளை எடுத்து செல்வார்கள். பின்னர் பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நிற்கும் இடத்தில் அதை நிறுத்தி விட்டு சென்று விடுவார்கள் என்பது தெரியவந்தது

இதையடுத்து பிடிபட்ட 2 பேர் உள்பட 12 முதல் 16 வயதுடைய 9 சிறுவர்கள் இதுபோன்ற மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து 9 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 27 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். 

Next Story