சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 20–வது நாளாக வேலை நிறுத்தம் ரூ.8 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிப்பு


சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 20–வது நாளாக வேலை நிறுத்தம்  ரூ.8 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 19 May 2018 8:30 PM GMT (Updated: 19 May 2018 2:27 PM GMT)

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 20–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.8 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

சங்கரன்கோவில், 

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 20–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.8 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீதம் கூலி உயர்வு, விடுமுறை சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ.300 வழங்கக்கோரி கடந்த மாதம் 30–ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி இதுவரை பேரணி, ஆர்ப்பாட்டம், சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றும் இதுவரை எந்த பயனும் இல்லை. இதற்கிடையே விசைத்தறி தொழிலாளர்கள், உரிமையாளர்கள் ஆகியோர்களிடையே கடந்த 10–ந் தேதி சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையும், 14–ந் தேதி நெல்லை தொழிலாளர்கள் நல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற 2–வது, 3–வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.

20–வது நாளாக...

இந்த நிலையில் விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நேற்று 20–வது நாளாக நடைபெற்றது. தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.8 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) மாலை பாடாப்பிள்ளையார் கோவில் முன்பு ஆர்ப்பாட்டமும், வருகிற 23–ந் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு பஸ் நிலையம் அருகே குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டமும் நடத்தப்போவதாக விசைத்தறி தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.


Next Story