தஞ்சை அருகே மாட்டுவண்டி மீது லாரி மோதி மாடு சாவு டிரைவர் கைது


தஞ்சை அருகே மாட்டுவண்டி மீது லாரி மோதி மாடு சாவு டிரைவர் கைது
x
தினத்தந்தி 20 May 2018 10:15 PM GMT (Updated: 20 May 2018 9:46 PM GMT)

தஞ்சை அருகே மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் மாடு பரிதாபமாக இறந்தது. மற்றொரு மாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்துள்ள வடகால் சீராளூர் கீழத்தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது45). இவர் நேற்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள வெண்ணாற்றங்கரை பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் மணல் எடுத்துக்கொண்டு சீராளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

தஞ்சையை அடுத்த களிமேடு பைபாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த போது அந்த வழியாக திருவையாறில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி எதிர்பாராத விதமாக மாட்டுவண்டி மீது பயங்கரமாக மோதியது. இதில் மாட்டுவண்டியை ஓட்டி வந்த கணேசன் படுகாயம் அடைந்தார். மேலும் சம்பவ இடத்திலேயே ஒரு மாடும் இறந்தது. மற்றொரு மாட்டிற்கு உயிர் ஊசலான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லாரி டிரைவர் கைது

இது குறித்து தகவல் அறிந்ததும் கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த கணேசனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சேலத்தை சேர்ந்த சேகர் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story