ஊரப்பாக்கத்தில் வாகனம் மோதி வாலிபர் பலி நண்பர்கள் 2 பேர் படுகாயம்


ஊரப்பாக்கத்தில் வாகனம் மோதி வாலிபர் பலி நண்பர்கள் 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 May 2018 10:00 PM GMT (Updated: 21 May 2018 8:56 PM GMT)

ஊரப்பாக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

வண்டலூர்,

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள கோவில் புரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுரேஷ்(வயது 18), சின்னராசு(20), அஜீத்குமார் (18). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

நேற்று முன்தினம் இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மேல்மலையனூரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். ஊரப்பாக்கம் அருகே செல்லும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயம் அடைந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர்களான சின்னராசு, அஜீத்குமார் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story