பள்ளி மாணவன் கொலையில் கைதான புவனகிரி வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பள்ளி மாணவன் கொலையில் கைதான புவனகிரி வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 23 May 2018 11:00 PM GMT (Updated: 23 May 2018 10:56 PM GMT)

பள்ளி மாணவன் கொலை வழக்கில் கைதான புவனகிரி வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஆராயி, அவரது மகள் தனம், மகன் 4-ம் வகுப்பு படித்து வந்த சமயன் ஆகிய 3 பேர் சரமாரியாக தாக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் மாணவன் சமயன் சம்பவ இடத்திலேயே இறந்தான். படுகாயமடைந்த ஆராயி, தனம் ஆகியோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், போலீசாருக்கு பெரும் சவாலையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு காரணமான கடலூர் மாவட்டம் மேல்புவனகிரியை சேர்ந்த வீரன் மகன் தில்லைநாதன் (37) என்பவரை அரகண்டநல்லூர் போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.

மேலும் விசாரணையில் கைதான தில்லைநாதன், விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி கடலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவரின் குற்றசெயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து தில்லைநாதனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில் தில்லைநாதனை நேற்று குண்டர் சட்டத்தின் கீழ் அரகண்டநல்லூர் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் கடலூர் சிறையில் இருக்கும் தில்லைநாதனுக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Next Story