விழுப்புரம் பிரதீபாவை தொடர்ந்து ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்த திருச்சி மாணவி சுபஸ்ரீ தற்கொலை


விழுப்புரம் பிரதீபாவை தொடர்ந்து ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்த திருச்சி மாணவி சுபஸ்ரீ தற்கொலை
x
தினத்தந்தி 6 Jun 2018 11:15 PM GMT (Updated: 6 Jun 2018 8:38 PM GMT)

விழுப்புரம் பிரதீபாவை தொடர்ந்து ‘நீட்‘ தேர்வில் தோல்வி அடைந்த திருச்சி மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். அண்ணா தொழிற்சங்க தலைவரின் மகளான இவரைப்பற்றி உருக்கமான தகவல் கிடைத்து உள்ளது.

திருச்சி,

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற சட்டம் தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வந்தது. நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாத அரியலூர் மாணவி அனிதா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டு கடந்த 4-ந்தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகம் முழுவதும் சுமார் 45 ஆயிரம் மாணவ மாணவிகள் மட்டுமே இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தனர். தேர்ச்சி பெற முடியாமல் போன மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் தங்களது டாக்டர் கனவு தகர்ந்து போனதாக வேதனையில் மூழ்கினார்கள்.

விழுப்புரம் மாவட்டம் பெருவளூரை சேர்ந்த மாணவி பிரதீபா பிளஸ்-2 தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்று இருந்தும், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று தான் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. பிரதீபா மரண செய்தி தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

பிரதீபா மரணம் ஏற்படுத்திய சோகம் அடங்குவதற்கு முன்பாக திருச்சியில் நேற்று இரவு ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

திருச்சியை அடுத்த நம்பர் ஒன் டோல்கேட் பக்கம் உள்ள உத்தமர் கோவிலை சேர்ந்தவர் கண்ணன். அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். அண்ணா தொழிற்சங்கத்தின் திருச்சி கிளை தலைவராகவும் உள்ளார். இவரது மகள் சுபஸ்ரீ (வயது17). சுபஸ்ரீ டாக்டருக்கு படிக்க வேண்டும் என விரும்பினார். இதற்காக துறையூரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி இருந்து பிளஸ்-2 படித்தார். பிளஸ்-2 தேர்வில் 907 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் சேர முடியும் என்பதால் தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து சிறப்பு பயிற்சியும் பெற்று நீட் தேர்வினை எழுதினார்.

ஆனால் ‘நீட்’ தேர்வில் அவர் தேர்ச்சி பெற முடியவில்லை. 24 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். மிக குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவரது டாக்டர் படிப்பு கனவு தகர்ந்து போனது. தேர்வு முடிவு வெளியானதில் இருந்தே தந்தை மற்றும் தாயுடன் அதிகம் பேசாமல் சுபஸ்ரீ இருந்து வந்தார். மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போய்விட்டதே என்று தனது தோழிகளிடமும் வேதனையுடன் கூறி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சுபஸ்ரீயின் பெற்றோர் கோவிலுக்கு சென்று விட்டு வந்தனர். இரவு 10 மணி அளவில் தனது அறையில் இருந்த சுபஸ்ரீ திடீர் என துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதனை அறிந்த அவரது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் காப்பாற்ற முயன்றனர். உடலை கீழே இறக்கி திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே சுபஸ்ரீ பரிதாபமாக இறந்து விட்டார்.

சுபஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி கொள்ளிடம் டோல்கேட் போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தில் மட்டும் இன்றி உறவினர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story