மினிவேன் தலைகுப்புற கவிழ்ந்தது: சாலையில் மாத்திரை கொட்டியதால் பரபரப்பு சூறாவளி காற்றில் சிக்கியதால் விபரீதம்


மினிவேன் தலைகுப்புற கவிழ்ந்தது: சாலையில் மாத்திரை கொட்டியதால் பரபரப்பு சூறாவளி காற்றில் சிக்கியதால் விபரீதம்
x
தினத்தந்தி 8 Jun 2018 9:30 PM GMT (Updated: 8 Jun 2018 7:13 PM GMT)

கங்கைகொண்டான் அருகே மாத்திரைகள் ஏற்றி வந்த மினி வேன் சூறாவளி காற்றில் சிக்கி திடீரென நிலைதடுமாறி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

கயத்தாறு,

கங்கைகொண்டான் அருகே மாத்திரைகள் ஏற்றி வந்த மினி வேன் சூறாவளி காற்றில் சிக்கி திடீரென நிலைதடுமாறி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் மாத்திரைகள் சாலையில் கொட்டியதால் பரபரப்பு நிலவியது.

மினிவேன் கவிழ்ந்தது

மதுரையில் இருந்து மாத்திரைகளை ஏற்றிக் கொண்டு ஒரு மினிவேன் நேற்று மதியம் நெல்லையில் உள்ள மொத்த மருந்து நிறுவனத்துக்கு வந்து கொண்டிருந்தது. கயத்தாறு–கங்கைகொண்டான் இடையே உள்ள பெட்ரோல் பல்க் அருகே ஒரு வளைவில் திரும்பிய போது பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதில் மினிவேன் சிக்கியதால் திடீரென நிலைதடுமாறி மூன்று முறை பல்டி அடித்து எதிர் திசையில் இழுத்து செல்லப்பட்டு மதுரைக்கு செல்லும் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

சாலையில் சிதறிய மாத்திரை

இதனால் மினிவேனில் இருந்த அட்டைப்பெட்டிகளில் இருந்து டப்பாக்களில் இருந்த மாத்திரைகள் வெளியே கொட்டி, சாலையில் சிதறி கிடந்தன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து நெல்லை–மதுரை நாற்கர சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவரை போலீசார் மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் போலீசாருடன் பொதுமக்களும் சேர்ந்து அங்கு கொட்டி கிடந்த மாத்திரைகளை பெட்டியில் பாதுகாப்பாக அள்ளினர். அதனை தொடர்ந்து கிரேன் மூலம் ரோட்டில் கவிழ்ந்த மினிவேன் மீட்கப்பட்டு, கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story