சூலூர் அருகே ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர் பஸ் மோதி படுகாயம், பொதுமக்கள் முற்றுகை


சூலூர் அருகே ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர் பஸ் மோதி படுகாயம், பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 Jun 2018 10:36 PM GMT (Updated: 11 Jun 2018 10:36 PM GMT)

சூலூர் அருகே ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர் பஸ்மோதி படுகாயம் அடைந்தார். தனியார் பஸ்சை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சூலூர்,

சூலூர் அருகே பி.கே.டி. நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 70), ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர். இவர், நேற்று தனது ஸ்கூட்டரில் சூலூர் சாலையில் உள்ள ஒரு சிப்ஸ் கடைக்கு சென்றார். கடைக்கு சென்றுவிட்டு சாலையை கடக்கும் போது, கோவையில் இருந்து பல்லடம் நோக்கி செல்லும் தனியார் பஸ் திடீரென ஜெயராமன் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டர் பஸ்சின் அடியில் சிக்கி சிறிது தூரம் இழுத்து சென்றது.

இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜெயராமன் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விபத்து நடந்த இடத்தில் தனியார் பஸ்சை முற்றுகையிட்ட பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சூலூர் சப்–இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story