சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Jun 2018 10:30 PM GMT (Updated: 13 Jun 2018 6:48 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றி குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட மின்மோட்டார் திடீரென பழுதடைந்தது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அருகில் உள்ள கிராம பகுதிகளுக்கும் விளைநிலங்களுக்கும் காலிகுடங்களுடன் சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் மின்மோட்டாரை சரிசெய்து தரக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கிராம மக்கள் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலையில் காலிகுடங்களுடன் பிள்ளையார்குப்பம் கிராமத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் உளுந்தூர்பேட்டை–திருவெண்ணெய்நல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் பேசி, குடிநீர் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையேற்ற கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story