திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்


திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 Jun 2018 10:30 PM GMT (Updated: 16 Jun 2018 6:18 PM GMT)

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

கல்லக்குடி,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் திருச்சி மாவட்டம் நெய்குளம் ஊராட்சியில் உள்ள நெடுங்கூர், சிறுகளப்பூர், சரடமங்கலம் ஆகிய கிராமங்களில் கட்சி கொடியேற்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், மாவட்ட தலைவர்கள் கே.வி.ஜி.ரவீந்திரன், நந்தாசெந்தில்வேல், குணா, புள்ளம்பாடி வட்டார நிர்வாகிகள் தியாகராஜன், ஜெயபிரகாசம், செல்வகுமார், ராஜமாணிக்கம் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அவர் சிறுகனூர் அருகே உள்ள நெடுங்கூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்ட பகுதிகள் வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு அந்த மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும். கோர்ட்டு உத்தரவின் படி தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை மாதாமாதம் கர்நாடகம் தர வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு நிரந்தர முழு நேர தலைவர் வேண்டும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக அமைத்திட வேண்டும். விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்.

சிறுகாம்பூரில் இருந்து சங்கேந்தி வரை உள்ள பெருவளை வாய்க்கால் பலவீனம் அடைந்துள்ளது. அதை சரிசெய்ய வேண்டும். சென்னை- சேலம் எட்டு வழி சாலையை அமைப்பதற்கு முன்பாக மக்களின் கருத்தினை ஏற்று அவர்களை பாதிக்காத வகையில் அரசு செயல்படுத்த வேண்டும். மக்களை மதிக்காமல் அலட்சியப்போக்கோடும், அச்சுறுத்தலோடும் செயல்பட்டால் மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை போன்று வருவதை தவிர்க்க முடியாது.

மக்களின் தேவைகளுக்காக ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவதில் த.மா.கா. முதல் நிலையில் உள்ளது. தற்போது அரசியல் களத்தில் த.மா.கா. தனித்தன்மையோடு விளங்குகிறது. சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்திக்கும் நிலையில் உள்ளது. தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story