சுகாதாரமற்ற முறையில் இயங்கிய 3 இறைச்சி கடைகளுக்கு சீல்


சுகாதாரமற்ற முறையில் இயங்கிய 3 இறைச்சி கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 7 July 2018 10:45 PM GMT (Updated: 7 July 2018 8:59 PM GMT)

தேன்கனிக்கோட்டையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய 3 இறைச்சி கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஆசாத் தெருவில் 10-க்கும் மேற்பட்ட மாட்டு இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மாட்டு இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்படும் மாட்டு இறைச்சிகள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இதைத் தொடர்ந்து மாவட்ட நியமன அலுவலர் பிருந்தா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், சிவமணி, சேகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அண்ணாமலை, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் நடேசன் மற்றும் குழுவினர் அந்த பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர்.

இதில் சில கடைகளில் சுகாதாரமற்ற முறையில் கடைகளில் மாட்டு இறைச்சிகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. அவ்வாறு செயல்பட்ட 3 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதே போல தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் ஆட்டு இறைச்சி கடைகள், கோழி இறைச்சி கடைகள் சிலவற்றிலும் சுகாதாரமற்ற முறையில் விற்பனை நடைபெறுகிறது. அந்த கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். 

Next Story