எதிரிகளை கொலை செய்ய திட்டம் தீட்டி மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்த 4 ரவுடிகள் கைது


எதிரிகளை கொலை செய்ய திட்டம் தீட்டி மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்த 4 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 9 July 2018 11:30 PM GMT (Updated: 9 July 2018 8:17 PM GMT)

தண்டையார்பேட்டையில் எதிர் தரப்பு ரவுடிகளை கொலை செய்ய திட்டம் தீட்டி மோட்டார் சைக்கிள்களில் கத்தியுடன் வலம் வந்த 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும், வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து வருவதாகவும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவாலி பிரியாவுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதையடுத்து வழிப்பறி கொள்ளையர்கள் மற்றும் ரவுடிகளை பிடிக்க துணை கமிஷனர் ரவாலி பிரியா தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதால் போலீசார் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்களை சோதனை செய்தபோது 10 கத்திகள் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், தண்டையார்பேட்டை கைலாச முதலி தெருவை சேர்ந்த பிரபல ரவுடிகளான லட்சுமணன் (வயது 26), பிரபு என்ற பிரபாகரன் (28), தில்லை நகரை சேர்ந்த கோவிந்தராஜ் (25), ராஜ்குமார் (24) என்பதும், கடந்த ஆண்டு தண்டையார்பேட்டையில் பிரபல ரவுடி ஜீவா என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அரிபாபு என்பவரின் கூட்டாளிகள் என்பதும் தெரியவந்தது.

மேலும், ஜீவா கூட்டாளிகளை கொலை செய்ய திட்டம் தீட்டி மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்ததும், பிரபு வீட்டில் 20 அரிவாள்கள் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தி 20 அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story