சீரான மின்வினியோகம் வழங்கக்கோரி இளையான்குடி மின்வாரிய அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா


சீரான மின்வினியோகம் வழங்கக்கோரி இளையான்குடி மின்வாரிய அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா
x
தினத்தந்தி 10 July 2018 11:00 PM GMT (Updated: 10 July 2018 7:46 PM GMT)

சீரான மின்வினியோகம் வழங்கக்கோரி இளையான்குடி மின்வாரிய அலுவலகத்தில் கரும்புக்கூட்டம், கருஞ்சுத்தி உள்பட 8 கிராமங்களை சேர்ந்த மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளையான்குடி,

இளையான்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்டது அரணையூர், பெருமானேந்தல், கருஞ்சுத்தி, அரியாண்டிபுரம், கரும்புக்கூட்டம், புதுக்குளம், வடக்கு கிரனூர், வலையனேந்தல். இந்த 8 கிராமங்களில் கடந்த 2 ஆண்டுகளாகவே சீரான மின்வினியோகம் இல்லாத நிலை உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் அன்றாட பணிகளை செய்யமுடியாமலும், விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் ஏற்படும் மின்தடையால் கிராம மக்கள் தூக்கம் இன்றி புழுக்கத்தில் தவித்து வந்ததுடன், பணிகள் செய்யமுடியாமல் அவதியுற்றனர். பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் இரவு நேரத்தில் ஏற்படும் மின்தடையால் படிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் சீரான மின் வினியோகம் வழங்கக்கோரி கரும்புக்கூட்டம் உள்பட 8 கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் சீரான மின்வினியோகம் வழங்கக்கோரியும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத மின்வாரியத்தை கண்டித்தும் நேற்று கரும்புக்கூட்டம், கருஞ்சுத்தி உள்பட 8 கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் இளையான்குடி பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த இளையான்குடி போலீசார், தாசில்தார் கண்ணதாசன் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மின்வாரிய அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story