இ-மெயிலில் கொலை மிரட்டல் எதிரொலி: முதல்-மந்திரி பட்னாவிசுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு


இ-மெயிலில் கொலை மிரட்டல் எதிரொலி: முதல்-மந்திரி பட்னாவிசுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 July 2018 10:16 PM GMT (Updated: 10 July 2018 10:16 PM GMT)

கொலை மிரட்டலை அடுத்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தற்போது நாக்பூர் மாவட்டத்தில் நடக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் 2 கொலை மிரட்டல் கடிதங்கள் இ-மெயிலில் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‘எனக்கு வந்த இ-மெயிலின் நகல்களை நான் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளேன். அவர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்’ என்றார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

‘கடந்த மாதம் கட்சிரோலி வனப்பகுதியில் போலீசார் நக்சலைட்டுகளுக்கு எதிராக நடத்திய துப்பாக்கிக்சூட்டில் 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இதற்கு பழி வாங்கும் வகையில், முதல்-மந்திரியையும், அவரது குடும்பத்தினரையும் கொல்லப்போவதாக இ-மெயிலில் வந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், எங்களில் சிலரை அரசு கொல்வதன் மூலம் எங்கள் சித்தாந்தங்களை உங்களால் அழிக்க முடியாது என அந்த இ-மெயிலில் கூறப்பட்டுள்ளது.

இந்த இ-மெயிலை தொடர்ந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அளித்து வந்த பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது’. வ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே ஒருமுறை மாவோயிஸ்டுகள் மூலம் முதல்-மந்திரிக்கு மிரட்டல் கடிதம் வந்த சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் அவருக்கு மிரட்டல் கடிதம் வந்திருப்பது கட்சியினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story