விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் பிரமுகர் படுகொலை வீடு புகுந்து மர்மஆசாமிகள் வெறிச்செயல்


விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் பிரமுகர் படுகொலை வீடு புகுந்து மர்மஆசாமிகள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 10 July 2018 11:30 PM GMT (Updated: 10 July 2018 10:32 PM GMT)

பொம்மிடி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். வீடுபுகுந்து மர்மஆசாமிகள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பி.துரிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் வீட்டில் குடியிருந்தவர் மாதையன். இவருடைய மனைவி சாந்தி (வயது 45). மாதையன் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுடைய மகன் நவீன் (23). இவர் தாய் சாந்தியுடன் வசித்து வந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட மகளிர் அணி துணை செயலாளராக சாந்தி பதவி வகித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் 2 பேர் சாந்தியின் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சாந்தியின் தலையின் பின்புறமும், நவீன் நெற்றியிலும் இரும்பு கம்பியால் அவர்கள் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சாந்தி ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பலத்த காயம் அடைந்த நவீன் வீட்டின் ஒரு மூலையில் மயங்கி விழுந்தார். பின்னர் அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

நேற்று காலை நவீனின் சித்தப்பா முல்லைவேந்தன் என்பவர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு சாந்தி படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுபற்றி பொம்மிடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சாந்தி வீட்டில் இருந்து மெயின்ரோடு வரை ஓடியது.

சாந்தி எதற்காக படுகொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் தற்போது சொந்த ஊரான கும்பாரஅள்ளிபுதூரில் புதிய வீடு கட்டும் பணி தொடங்கி உள்ளார். பணத்திற்காக யாராவது வீடுபுகுந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காயம் அடைந்த நவீன் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story