பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிப்பு காலை 6 மணிக்குள் தெரிவிக்கப்படும் - மந்திரி வினோத் தாவ்டே தகவல்


பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிப்பு காலை 6 மணிக்குள் தெரிவிக்கப்படும் - மந்திரி வினோத் தாவ்டே தகவல்
x
தினத்தந்தி 11 July 2018 11:55 PM GMT (Updated: 11 July 2018 11:55 PM GMT)

மழைக் காலங்களில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிப்பு காலை 6 மணிக்குள் தெரிவிக்கப்படும் என மந்திரி வினோத் தாவ்டே கூறியுள்ளார்.

மும்பை,

மும்பையில் கடந்த 9-ந்தேதி கன மழை பெய்தது. இந்தநிலையில் கல்வி மந்திரியும், மும்பை பொறுப்பு மந்திரியுமான வினோத் தாவ்டே அன்று காலை 10 மணிக்கு பிறகு பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவித்தார். ஆனால் அன்று காலை 7 மணிக்கே பள்ளிகள் தொடங்கிவிட்டன. இந்த திடீர் அறிவிப்பு காரணமாக மழையில் கஷ்டப்பட்டு பள்ளிக்கு சென்ற குழந்தைகள் மீண்டும் நீரில் தத்தளித்தபடி வீட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் மும்பையில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம் மந்திரி வினோத் தாவ்டே தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ரெயில்வே, போலீஸ், மும்பை மாநகராட்சி, மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அமைப்புகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின்னர் மந்திரி வினோத் தாவ்டே கூறியதாவது:-

மழைக்காலங்களில் நகர் பகுதியில் நிலைமையை ஆராய்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவதற்காக மும்பை மாநகராட்சி சார்பில் பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்படும்.

இந்த குழுவில் உள்ள அதிகாரிகள் கனமழை காலங்களில் காலை 5 மணிக்கு கூட்டம் நடத்துவார்கள். இந்த குழுவானது தேவைப்படும் பட்சத்தில் காலை 6 மணிக்குள் முடிவு எடுத்து அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறையை அறிவிக்கும். சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறையை அவர்களே முடிவு செய்வார்கள். அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த குழுவின் வழிகாட்டுதல் படி நடத்துகொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story