மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஜராகி வாக்குமூலம்


மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஜராகி வாக்குமூலம்
x
தினத்தந்தி 13 July 2018 11:00 PM GMT (Updated: 13 July 2018 9:52 PM GMT)

போலீசார் தாக்கியதாக அளித்த மனு மீதான விசாரணையில் திருவண்ணாமலை மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

திருவண்ணாமலை,

சென்னை- சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செங்கம் அருகே மண்மலை கிராமத்தில் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திய விவசாயிகளின் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபுவும் பங்கேற்றார்.

பின்னர் அவர், கரியமங்கலம் அருகே உள்ள உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த போது அங்கு செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் வந்தனர். டில்லிபாபுவை போலீசார் தாக்கி தரத்தரவென பிடித்து இழுத்துச் சென்று கைது செய்ததாக தெரிகிறது.

போலீசாரின் செயல் மனித உரிமைகளை மீறிய செயல் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றத்தில், டில்லிபாபு கடந்த 10-ந் தேதி மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகிய முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு, நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் வெளியே வந்த அவர் கூறுகையில், மனித உரிமையை மீறிய துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசாரை தூண்டிவிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தையும், மனித உரிமைகளையும் போலீசார் மீறி உள்ளனர். இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

Next Story