கர்நாடக சட்டசபை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு


கர்நாடக சட்டசபை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 14 July 2018 12:12 AM GMT (Updated: 14 July 2018 12:12 AM GMT)

10 நாட்களாக நடைபெற்று வந்த கர்நாடக சட்டசபை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி மலர்ந்தது. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு முதல் முறையாக கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது.

முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார். 5-ந் தேதி கர்நாடக பட்ஜெட்டை குமாரசாமி தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து சட்டசபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார். பின்னர் கர்நாடக சட்டசபையில் சபாநாயகர், நேற்று சபை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

15-வது சட்டசபையின் முதல் கூட்டம் ஏற்கனவே 2 நாட்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த 2-ந் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி இன்றுடன்(அதாவது நேற்று) நிறைவடைகிறது. ஆகமொத்தம் 12 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடந்துள்ளது. இதில் 53 மணி நேரம் 5 நிமிடங்கள் சபை நடவடிக்கைகள் நடைபெற்று உள்ளன. இதில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 16 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்தன.

கடந்த 5-ந் தேதி குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட் மீது 16 மணி நேரம் 16 நிமிடங்கள் விவாதம் நடைபெற்றன. இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 747 கேள்விகள் கேட்கப்பட்டன. 566 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டன. விதி எண் 73-ன் கீழ் வந்த 123 தீர்மானங்களில் 73 தீர்மானங்களுக்கு பதில் அளிக்கப்பட்டன. 10 தீர்மானங்கள் மீது சபையில் விவாதம் நடத்தப்பட்டன. இந்த சபையை தேதி குறிப்பிடாமல் காலவரையின்றி ஒத்திவைக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story